Published : 07 Sep 2023 07:12 AM
Last Updated : 07 Sep 2023 07:12 AM

அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன 31 எம்க்யூ-9பி டிரோன்கள் கொள்முதல்: பாதுகாப்புத் துறை விரைவில் முடிவு

புதுடெல்லி: அமெரிக்காவின் ஜெனரல் அடாமிக்ஸ் (ஜிஏ) நிறுவனத்திடமிருந்து 31 எம்க்யூ-9பி டிரோன்களை கொள்முதல் செய்வதற்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பும் பணி இறுதி கட்டத்தில் உள்ளதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முப்படைகள் பயன்பாட்டுக்கு அமெரிக்காவின் ஜிஏ நிறுவன தயாரிப்பான 31 எம்க்யூ-9பி டிரோன்கள் தேவை என பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதற்கு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது. இதற்கான அறிவிப்பு பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றிருந்தபோது வெளியிடப்பட்டது. அதேபோல் ஜிஇ நிறுவனமும் இந்தியாவின் எச்ஏஎல் நிறுவனமும் இணைந்து இந்திய விமானப் படைக்காக போர் விமான இன்ஜின்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் 31 எம்க்யூ-9பி டிரோன்களை கொள்முதல் செய்வதற்கு அமெரிக்காவிடம் வேண்டுகோள் கடிதம் அனுப்புவதற்கான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கடிதம் இன்னும் ஒரு மாதத்தில் அமெரிக்க அரசுக்கு அனுப்பப்படும். அதன்பின் விலை விவரங்கள், ஆளில்லா போர் விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிகள், உதிரிபாகங்கள் விநியோகம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படும். 3072 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்த ட்ரோன்கள் கொள்முதல் செய்யப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் சில பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளன.

இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு திறன்களை ஊக்குவிக்க, ஜிஏ நிறுவனம் இந்தியாவில் உலகளாவிய பணிமனையை அமைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x