Published : 29 Aug 2023 05:04 AM
Last Updated : 29 Aug 2023 05:04 AM

சூரியனை ஆய்வு செய்வதற்காக செப்.2-ல் விண்ணில் பாய்கிறது ஆதித்யா-எல்1: மக்கள் நேரில் பார்க்க ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ ஏற்பாடு

பிரதிநிதித்துவப் படம்

பெங்களூரு: சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ள ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள், ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-எக்ஸ்எல் ராக்கெட் மூலம் செப்.2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த 23-ம் தேதி நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. லேண்டர் கலன், இறங்கிய இடத்தில் இருந்தபடியும், அதில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்ட ரோவர் வாகனம், ஊர்ந்து சென்றபடியும் நிலவில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையே, சூரியன் குறித்த ஆராய்ச்சியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சூரியன் - பூமி இடையே ‘லெக்ராஞ்சியன்’ எனப்படும் 5 சமநிலை புள்ளிகள் உள்ளன. இந்த புள்ளிகளில் நிலைநிறுத்தப்படும் பொருட்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாது. இதன்படி லெக்ராஞ்சியன் புள்ளி 1 (எல்1)பகுதியில் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையமும், ஐரோப்பிய விண்வெளி மையமும் இணைந்து கடந்த 1996 முதல் சூரியனை ஆய்வுசெய்து வருகின்றன. இதற்காக நாசாசார்பில் எல்-1 பகுதியில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

சூரியன் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த 15 ஆண்டுகளாக தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர். இதன் பலனாக இஸ்ரோ சார்பில் சூரியனை ஆய்வுசெய்ய ஆதித்யா-எல்1 என்ற அதிநவீன செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டுள்ளது. இது எல்-1 பகுதியில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரோ நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 செயற்கைக்கோள், ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-எக்ஸ்எல் ராக்கெட் மூலம் செப்.2-ம் தேதி காலை 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும். இதை நேரில் பார்வையிட https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp என்ற இணையத்தில் பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

7 நவீன ஆய்வு கருவிகள்: சூரியனை பற்றி ஆய்வு செய்ய உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.424 கோடியில் ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) என்ற தொலைநோக்கி, எஸ்யுஐடி (Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி, ஏ-ஸ்பெக்ஸ் (Aditya Solar wind Particle Experiment) என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி, சூரிய சக்தியை ஆராயும் பிஏபிஏ (Plasma Analyser Package for Aditya), சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள், வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ் (Solar Low Energy X-ray Spectrometer), சூரியனின் வெளிப்புற அடுக்குகளில் ஏற்படும் மாற்றங்களை ஆராயும் ஹெல் 10எஸ் (High Energy L1 Orbiting X-ray Spectrometer), கிரகங்களுக்கு இடையிலான காந்தப்புல தன்மையை அளவிடும் மேக்னோமீட்டர் ஆகிய 7 முக்கிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 4 கருவிகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்யும். 3 கருவிகள் சூரியனின் வெளிப்பகுதி, துகள்கள், எல்-1 பகுதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும்.

பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ.தொலைவில் எல்-1 பகுதி உள்ளது. இந்த பகுதியை ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள் சென்றடைய 4 மாதங்கள் வரை ஆகலாம்.

இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்து, இந்தியாவின் செயற்கைக்கோள் சூரியனை நோக்கி நெருங்கி செல்வது மைல் கல் சாதனையாக இருக்கும் என்றுஇஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நிலவில் 4 மீட்டர் பள்ளம்.. பாதையை மாற்றியது ரோவர்

மேடு, பள்ளம் நிறைந்துள்ள நிலவின் தென்துருவப் பகுதியில் வலம் வரும் பிரக்யான் ரோவர் வாகனம், தனது கேமரா கண்களால் பார்த்து நிதானமாக நகர்ந்து செல்கிறது. இந்த கேமராவால் 5 மீட்டர் தொலைவு வரை தெளிவாக பார்க்க முடியும்.

இந்நிலையில், ரோவர் சென்ற பாதையில் சுமார் 4 மீட்டர் (13 அடி) விட்டம் கொண்ட பள்ளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக, பள்ளத்தை தவிர்த்து பாதுகாப்பான பாதையில் ரோவர் நகர்த்தப்பட்டது. இதுகுறித்து சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் கூறும்போது, ‘‘நிலவின் தென்துருவப் பகுதியில் பிரக்யான் ரோவரை நகர்த்தும்போது பல்வேறு சவால்கள் எழுகின்றன. எனவே, ரோவரின் கேமரா பதிவுகளை பார்த்து, அதற்கேற்ப செயல்படுகிறோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x