Last Updated : 25 Dec, 2017 08:37 AM

 

Published : 25 Dec 2017 08:37 AM
Last Updated : 25 Dec 2017 08:37 AM

நாட்டிலேயே முதல் முறையாக பெங்களூருவுக்கு தனி ‘லோகோ’: கர்நாடக மாநில அரசு வெளியிட்டது

நாட்டிலேயே முதல்முறையாக பெங்களூரு மாநகருக்கு தனியாக இலச்சினை (லோகோ) ஒன்றை, கர்நாடக அரசு நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.

கர்நாடக சுற்றுலாத்துறை சார்பாக பெங்களூருவில் உள்ள டாக்டர் அம்பேத்கர் வீதியில் நேற்று, ‘நம்ம பெங்களூரு திருவிழா’ நடைபெற்றது. பெங்களூருவின் பிரதான சாலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தொடங்கி வைத்த இந்த விழா காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்றது. வாகன போக்குவரத்து முற்றிலுமாக தடைசெய்யப்பட்ட இந்த சாலையில் பெங்களூரு வின் கலை, கலாச்சாரம் உள்ளிட்டவற்றை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இதையடுத்து, சட்டப்பேரவை வாயிலில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பிரியங்க் கார்கே பெங்களூரு மாநகருக்கான இலச்சினையை அறிமுகப்படுத்தினார். அப்போது பிரியங்க் கார்கே பேசும்போது, ‘‘நியூயார்க், பாரிஸ், லண்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட உலக நகரங்களின் வரிசையில், இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரு மாநகருக்கு என தனியாக இலச்சினையை கர்நாடக அரசு உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பெங்களூரு இந்தியாவில் உள்ள மாநகரங்களின் பட்டியலில் முன்னணி இடத்தை பிடிக்கும்.

இதன் மூலம் உலக அளவில் பெங்களூருவுக்கு தனி ‘பிராண்ட்’ உருவாக்கப்பட்டு, அதன் மதிப்பு உயர்த்தப்படும். இத்தகைய முயற்சியால் சுற்றுலாத்துறை பெங்களூருவில் மிக வேகமாக வளரும். பன்னாட்டு நிறுவனங்கள் பெங்களூருவை நோக்கி வரும் சூழல் உருவாக்கப்படுவதால் இங்கு வேலைவாய்ப்பு பெருகும். இதன் மூலம் கர்நாடகா பொருளாதார ரீதியாக மிகவும் வேகமாக முன்னேறும்’’ என்றார்.

கர்நாடக அரசு அறிமுகப்படுத்தியுள்ள இந்த இலச்சினை ஆங்கிலம், கன்னடம் ஆகிய எழுத்துகளில் இடம்பெற்றுள்ளன. கறுப்பு, சிவப்பு வண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இலச்சினை, நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு பச்சை, சிவப்பு உள்ளிட்ட வண்ணங்களில் மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெங்களூருவை மையப்படுத்தி அரசு, தனியார் மேற்கொள்ளும் அனைத்து நிகழ்வுகளிலும் இந்த இலச்சினை இடம்பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. இதனிடையே அமைச்சர் பிரியங்க் கார்கே பெங்களூரு இலச்சினையை வடிவமைத்த வினோத் குமாருக்கு ரூ.5 லட்சத்தை பரிசாக வழங்கினார்.

பரிசை பெற்றுக் கொண்ட வினோத் குமார் பின்னர் பேசும்போது, ‘‘பெங்களூரு எங்களது அடையாளம். பெங்களூரு எங்களது பாரம்பரியம். இருப்பினும் இங்கு உங்களது சுதந்திரத்தில் தலையிட மாட்டோம். நீங்கள் நீங்களாகவே இருக்கலாம் என்பதை குறிக்கும் வகையிலே ஆங்கிலத்தில் ‘Be’ and ‘u’ (‘be you’) என சிவப்பு வண்ணத்தில் குறிக்க‌ப்பட்டுள்ளது’’ என்றார்.

புதிய இலச்சினை பேரவை வளாகம் முன்பு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x