Published : 26 Dec 2017 09:49 AM
Last Updated : 26 Dec 2017 09:49 AM
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் அமோக வெற்றி பெற்றதை பெங்களூரு சிறையில் உள்ள தொலைக்காட்சியில் பார்த்த சசிகலா மிகவும் உற்சாகம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா கடந்த பிப்ரவரி 15-ம் தேதி முதல் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதிமுக அணிகளுக்கு இடையேயான மோதல், இரட்டை இலை சின்னம் முடக்கம், டிடிவி தினகரன் மீது வழக்கு, எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வம் அணிகள் இணைப்பு, வருமான வரி சோதனை என அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்களால் சிறையில் சசிகலா மிகவும் வருத்தமாக காணப்பட்டார்
இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அவரது உறவினர் டிடிவி. தினகரன் சுயேச்சையாக போட்டியிட்டார். சிறையில் உள்ள தொலைக்காட்சி மூலம் ஆர்.கே.நகர் தேர்தல் நிலவரத்தை சசிகலா மிகவும் உன்னிப்பாக கவனித்துவந்தார். நேற்று முன் தினம் தேர்தல் முடிவுகள் வெளியானபோது சசிகலா தன் உறவினர் இளவரசியுடன் இணைந்து காலை முதல் மாலை வரை தொடர்ந்து செய்தி சேனல்களை பார்த்துக்கொண்டிருந்தார்.
அதிமுக சார்பில் போட்டியிட்ட மதுசூதனன், திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆகியோரைவிட டிடிவி தினகரன் அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றதை நேரலையில் கண்ட சசிகலா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
அதிலும் டிடிவி தினகரன் 40 ஆயிரத்து 707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை மிகவும் உற்சாகத்தோடு சசிகலா சிறைத் துறையினரிடம் பகிர்ந்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு சசிகலா உற்சாகமாக இருந்ததாக சிறைத் துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து முக்கிய விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த சிறைக்கு வருமாறு டிடிவி தினகரனுக்கு சசிகலா தகவல் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து இன்னும் சில தினங்களில் டிடிவி தினகரன் பெங்களூரு வர திட்டமிட்டுள்ளார். அநேகமாக வருகிற 29-ம் தேதிக்கு பிறகு அவர் தனது குடும்பத்தினருடன் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து ஆசி பெறுவார்.
அப்போது ஆட்சியிலும், கட்சியிலும் மேற்கொள்ள வேண்டிய முக்கிய திட்டங்கள் குறித்து சசிகலாவுடன் ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT