Published : 24 Aug 2023 12:23 PM
Last Updated : 24 Aug 2023 12:23 PM

இமாச்சலின் குலு மாவட்டத்தில் நிலச்சரிவு: கட்டிடங்கள் அட்டை வீடு போல் சரிந்து விழுந்த பயங்கரம்

புதுடெல்லி: இமாச்சலப்பிரதேசம் குலு மாவட்டத்தில் மழை காரணமாக இன்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட நிலச்சரிவால் பல வீடுகள் சரிந்து விழுந்தன. இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

நிலச்சரிவினால் கட்டிடங்கள் அட்டை வீடுகள் போல சரிந்து விழும் வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே இதுகுறித்து மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தனது எக்ஸ் (ட்விட்டர்) வெளியிட்டுள்ள பதிவில், "பங்கரமான நிலச்சரிவின் காரணமாக , குலு மாவட்டம், அன்னி பகுதியில் இருந்து வணிக கட்டிடம் இடிந்து விழும் மனதை நெருடச்செய்யும் காட்சிகள் உலா வருகின்றன. இந்த பாதிப்பினை முன்னரே கணித்து மாவட்ட நிர்வாகம் இரண்டு நாட்களுக்கு முன்பே கட்டிடங்களில் இருந்தவர்களை காலி செய்ய செய்தது குறிப்பிடத்தக்கது" என்று தெரிவித்துள்ளார்.

குலுவில் பெய்துவரும் கனமழை காரணமாக குலு - மண்டி சாலை சேதமடைந்துள்ளதால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய குலுவின் மூத்த போலீஸ் அதிகாரி சாக்‌ஷி வர்மா,"குலுவையும் மண்டியையும் இணைக்கும் சாலை சேதமைடந்துள்ளது. மாற்றுப்பாதையான பான்டோ சாலையும் சேதமடைந்துள்ளது. இதனால் அங்கு தற்போது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர்மழை, மேகவெடிப்பு,நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக அம்மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த பாதிப்புகளை மாநில பேரிடராக மாநில அரசு அறிவித்திருந்தது. மேலும் சேதங்களைக் கணக்கிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது.

இமாச்சலில் ஜூன் 24ம் தேதி பருவ மழை தொடங்கியது முதல் தற்போது பெய்துவரும் மழை பாதிப்புகள் வரை மாநிலத்தின் உள்கட்டமைப்பு சேதமதிப்பு ரூ.8,014.61 கோடிக்கும் மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநில அரசுத் தகவலின் படி, எதிர்பாராத மழை காரணமாக மாநிலத்தில் 2,022 வீடுகள் முழுமையாகவும், 9,615 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. 113 நிலச்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். உள்கட்டமைப்பு வசதிகள் வெகுவாக சேதமைடந்துள்ளன. இந்த பருவமழையால் 224 பேரும், மழை தொடர்பான விபத்துகளில் 117 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே இமாச்சலப்பிரதேசத்தில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மேலும் மாநிலத்துக்கு ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x