Published : 21 Aug 2023 05:17 AM
Last Updated : 21 Aug 2023 05:17 AM

அயோத்தி ராமர் கோயிலில் மனைவியுடன் ரஜினி வழிபாடு: சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுடனும் சந்திப்பு

ரஜினிகாந்த் நேற்று தனது மனைவியுடன் அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்று வழிபட்டார்.

லக்னோ: நடிகர் ரஜினிகாந்த் நேற்று அயோத்தி ராமர் கோயிலுக்கு தனது மனைவியுடன் சென்று வழிபட்டார். ஜெயிலர் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு ரஜினி, கடந்த 9-ம் தேதி இமயமலைக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டார்.

இமயமலைப் பயணத்தை முடித்த அவர், வட மாநிலங்களில் உள்ள முக்கியக் கோயில்களுக்குச் சென்று வழிபட்டு வருகிறார். அத்துடன் அந்த மாநிலங்களில் உள்ள அரசியல் தலைவர்களையும் அவர் சந்தித்து வருகிறார். இந்நிலையில், நேற்று உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு தன் மனைவியுடன் சென்று ரஜினி வழிபட்டார்.

இமயமலைப் பயணத்தை முடித்துவிட்டு, கடந்த வாரம் ஜார்க்கண்ட் மாநிலம் வந்தடைந்த ரஜினி, அங்குள்ள காளி கோயிலுக்குச் சென்று வழிபட்டார். ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து உரையாடினார்.

இதையடுத்து, அயோத்தி ராமர் கோயில் செல்வதற்காக அவர் கடந்த வெள்ளிக்கிழமை உத்தர பிரதேச மாநிலம் வந்தடைந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தனது மனைவியுடன் சென்று சந்தித்த ரஜினி, யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசி பெற்றார். மேலும், உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவுடன் ஜெயிலர் படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டுகழித்தார். உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேலையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இந்நிலையில், நேற்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை ரஜினி சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்து ரஜினி கூறுகையில், “9 ஆண்டுகளுக்கு முன்பு அகிலேஷ் யாதவை மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன். அது முதல் நாங்கள் இருவரும் நண்பர்களாக உள்ளோம். தொலைபேசியில் பேசிக்கொள்வோம். 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திரைப்படத்துக்காக லக்னோ வந்திருந்தேன். ஆனால், அப்போது அவரை பார்க்க முடியவில்லை. ஆனால், இந்த முறை பார்த்துவிட்டேன்” என்று தெரிவித்தார்.

அகிலேஷ் ட்வீட்: ரஜினி உடனான புகைப்படத்தை தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்த அகிலேஷ் யாதவ், “இதயங்கள் சந்திக்கையில் ஆரத்தழுவுகின்றன. மைசூரில் நான் பொறியியல் படித்துக்கொண்டிருக்கும்போது, ரஜினிகாந்தின் திரைப்படங்களை திரையரங்கில் சென்று பார்ப்பேன். மகிழ்ச்சியான தருணமாக அது இருக்கும். இன்னும் அந்த மகிழ்ச்சியை உணர்கிறேன்” என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து ரஜினி அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு சென்று வழிபட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x