Published : 30 Dec 2017 11:11 AM
Last Updated : 30 Dec 2017 11:11 AM
இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு காங்கிரஸ்தான் காரணம் என, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவிடம் ஆட்சியை காங்கிரஸ் பறிகொடுத்தது. . அங்கு மொத்தம் 68 இடங்களில் காங்கிரஸ் 20 இடங்களில் மட்டுமே வென்றது. 44 இடங்களில் வெற்றி பெற்று பாஜக அங்கு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்காக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று சிம்லா வந்தார்.
கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், தேர்தலில் வெற்றிபெற்ற எம்எல்ஏக்கள் மற்றும் தோல்வியடைந்த வேட்பாளர்களையும் சந்தித்து பேசினார். அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்து பாஜக வெற்றி பெற்றதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:
"குஜராத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒன்றுபட்டு செயல்பட்டு கட்சிக்கு பெரும் கவுரவத்தை தந்துள்ளனர். ஆனால், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கட்சிக்கு தோல்வியை தேடி தந்துள்ளனர்.
இங்கு காங்கிரஸ் தோல்விக்கு காங்கிரஸே காரணம். கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் சகித்துக் கொள்ள முடியாது. முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT