Last Updated : 17 Aug, 2023 05:41 AM

 

Published : 17 Aug 2023 05:41 AM
Last Updated : 17 Aug 2023 05:41 AM

நூ மதக்கலவரத்தின் முக்கியக் குற்றவாளி கைது - கொடி யாத்திரை நடத்திய கும்பல் மசூதியில் புகுந்து கோஷம்

புதுடெல்லி: ஹரியாணாவின் நூ மாவட்ட மதக்கலவரத்தின் முக்கிய குற்றவாளியான பிட்டு பஜ்ரங்கி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜுலை 31-ல் ஹரியாணாவின் நூ மாவட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளத்தின் ஆதரவில் நடைபெற்ற ஆன்மிக ஊர்வலம், மதக்கலவரமாக மாறியது. நூவை சுற்றியுள்ள குருகிராம், பல்வல் மற்றும் பரீதாபாத் ஆகிய நகரங்களிலும் பரவியக் கலவரம் தற்போது முடிவுக்கு வரத் தொடங்கிள்ளது. அதேசமயம், கலவரத்திற்கு காரணமான குற்றவாளிகளை ஹரியாணா போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதில், முக்கியக் குற்றவாளியான பிட்டு பஜ்ரங்கி எனும் ராஜ்குமார் கைதாகி உள்ளார்.

பிட்டு பஜ்ரங்கி, ஹரியாணாவின் பரீதாபாத்தில் தனியாக ஒரு பசு பாதுகாவலர் படை நடத்தி வந்தார். இவர், நூ மதக்கலவரத்தில் தேடப்படும் மற்றொரு முக்கிய குற்றவாளியான மோனு மானேசருக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படுபவர். மோனுமானேசரை போல், பஜ்ரங்கியும் கலவரத்திற்கு முன்பாக ஆத்திரமூட்டும் பல காட்சிப்பதிவுகளை சமூவலைதளங்களில் பதிவேற்றம் செய்திருந்தார். பஜ்ரங்கி மீது ஏற்கெனவே சுமார் 20 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட அவர், ஜாமீனில் இருந்துவந்தார்.

இச்சூழலில், மதக்கலவர வழக்கில் பிட்டு பஜ்ரங்கியை ஹரியாணா போலீஸார் மீண்டும் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்த உரிமம் இல்லாத இரண்டு கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

இவர் பஜ்ரங்தளம் மற்றும் விஷ்வ இந்து பரிஷத்திலும் தீவிர உறுப்பினராக இருந்தவர் எனக் கருதப்படுகிறது. இந்த இரண்டு அமைப்புகளும் தங்களது இயக்கங்களில் பிட்டு பஜ்ரங்கி பணியாற்றவில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு, வட மாநிலங்களில் சில இளைஞர் அமைப்பினர் தேசியக் கொடிகளை ஏந்தி தங்கள் இருசக்கர வாகனங்களில் யாத்திரைகள் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நேற்றுமுன்தினம், ஹரியாணாவின் பானிபத் நகரிலும் கொடி யாத்திரை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சுமார் நூறு பேர் கொண்ட கும்பல், திடீர் என தங்கள் வழியில் இருந்த மசூதியினுள் புகுந்து கோஷமிட்டனர். சில நிமிடங்களுக்கு பின் அவர்கள் மசூதியிலிருந்து வெளியேறினர்.

அப்போது உள்ளே மூன்று முஸ்லிம் இளஞர்கள் இருந்துள்ளனர். அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு புகார் அளித்தனர். இதன்பேரில் மசூதியினுள் புகுந்த கும்பலை போலீஸார் சிசிடிவி கேமிராக்கள் உதவியுடன் தேடி வருகின்றனர். இந்த தகவல் பானிபத் நகர் முழுவதிலும் பரவி பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு மத்திய பாதுகாப்பு படையினர் அமர்த்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x