Published : 19 Dec 2017 09:35 AM
Last Updated : 19 Dec 2017 09:35 AM

குஜராத்தில் காங்கிரஸ் தோல்வி அடைந்தாலும் பாஜக.வுக்கு சவாலான ஹர்திக்: வாக்கு சதவீதம் சரிய காரணமானது பிரச்சாரம்

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவினாலும் அந்த மாநிலத்தின் வலுவான படேல் சமுதாய தலைவராக ஹர்திக் படேல் உருவெடுத்துள்ளார். தேர்தலில் பாஜகவுக்கு அவர் மிகப்பெரும் சவாலாக விளங்கியதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

குஜராத் தேர்தலில் படேல் சமுதாய தலைவர் ஹர்திக் படேல், தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி, பிற்படுத்தப்பட்டோர் சமூக தலைவர் அல்பேஷ் தாக்கோர் ஆகியோருடன் காங்கிரஸ் கட்சி கைகோத்தது. இதில் அல்பேஷ் தாக்கோர், காங்கிரஸில் அதிகாரப்பூர்வமாக இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மேவானி காங்கிரஸ் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

காங்கிரஸுக்கு முழு ஆதரவு அளித்த படிதார் அனாமத் அந்தோலன் சமிதி தலைவர் ஹர்திக் படேல் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் அவரது பிரச்சாரம் பாஜகவுக்கு பெரும் சவாலாக மாறியது. படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரியும், ஜிஎஸ்டி வரிக்கு எதிராகவும் அவர் மேற்கொண்ட பிரச்சாரத்தால் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. பெரும்பாலான தொகுதிகளில் பாஜக மிக குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக டாங்க், பிலோடா, ஜாலோடா, தாஹோத் பகுதிகளில் பாஜக வாக்கு சதவீதம் சரிந்துள்ளது.

நகரங்கள், கிராமங்களில் ஹர்திக்கின் பேச்சால் ஈர்க்கப்பட்ட படேல் சமுதாய இளைய தலைமுறையினர் காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் காரணமாக கடந்த தேர்தலைவிட காங்கிரஸின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவினாலும் 24 வயதான ஹர்திக் அந்த மாநிலத்தின் வலுவான படேல் சமுதாய தலைவராக உருவெடுத்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு அவர் பெரும் சவாலாக விளங்கினார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x