Published : 14 Aug 2023 08:43 AM
Last Updated : 14 Aug 2023 08:43 AM

பழங்குடியினரை வனப்பகுதியிலேயே அடக்கி வைக்க ஆளும் பாஜக முயற்சி: வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ராகுல் காந்தி | கோப்புப்படம்

வயநாடு: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினராக உள்ளார். அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவர் எம்.பி. பதவியை இழந்தார். இதனிடையே, அவரது தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதையடுத்து, அவருடைய எம்.பி. பதவி தகுதியிழப்பு ரத்தானது.

மீண்டும் எம்.பி. பதவியில் நியமிக்கப்பட்ட பிறகு ராகுல் காந்தி முதல் முறையாக நேற்று முன்தினம் தனது வயநாடு தொகுதிக்கு சென்றார். அங்கு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் பேசியதாவது:

மத்தியில் ஆளும் பாஜக, பழங்குடியினத்தவர்களை ஆதிவாசி என அழைப்பதற்கு பதில் வனவாசி எனக் கூறி அவமதிக்கிறது. இதற்கு பின்னால் ஒரு சதி உள்ளது. அதாவது நிலத்தின் அசல் உரிமையாளர்கள் என்ற அந்தஸ்தை அவர்களுக்கு வழங்க மறுக்கிறது. அவர்களை வனப்பகுதியிலேயே அடக்கி வைக்க பாஜக முயற்சிக்கிறது. இதன் மூலம் வனப்பகுதி நிலங்களை அவர்களிடமிருந்து கைப்பற்றி தொழிலதிபர்களுக்கு வழங்குகிறது.

பாஜகவின் இந்த சித்தாந்தம் ஏற்க கூடியது அல்ல. பழங்குடியினரை வனவாசி என அழைப்பது வரலாற்றையும் பழங்குடியினரின் பாரம்பரியத்தையும் திரிக்கும் முயற்சி ஆகும். இது நாட்டு மக்களுடனான அவர்களுடைய உறவின் மீதான தாக்குதல் ஆகும். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை பழங்குடியினர் ஆதிவாசிகள். நிலத்தின் உண்மையான உரிமையாளர்கள் அவர்கள்தான். எனவே, அவர்களுக்கு நில உரிமை வழங்கப்பட வேண்டும்.

மேலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து பழங்குடியினருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்டவற்றில் சரிசமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

இப்பகுதியில் அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதால் புற்றுநோய் மருத்துவமனையில் நோயாளிகளும் மருத்துவர்களும் சிரமப்படுகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் வழங்கப்படும். இதன் மூலம் மின்சார தட்டுப்பாடு பிரச்சினை தீரும் என நம்புகிறேன்.

இப்பகுதியில் வசிக்கும் பெண்களில் அதிகப்படியானோருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, நடமாடும் மார்பக புற்றுநோய் பரிசோதனை மையத்தை நிறுவ வேண்டும். இதனால் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவோரை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை தர முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x