Published : 14 Aug 2023 06:30 AM
Last Updated : 14 Aug 2023 06:30 AM

சீனா, பாகிஸ்தான் எல்லைகளை கண்காணிக்க 4 புதிய ‘ஹெரான் மார்க் 2’ ட்ரோன்கள்

புதுடெல்லி: நாட்டின் வடக்கு எல்லை பகுதியில் உள்ள விமானப்படை தளத்தில் 4 புதிய ‘ஹெரான் மார்க் 2’ ட்ரோன்களை இந்திய விமானப்படை சேர்த்துள்ளது.

இந்திய விமானப்படையில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் ட்ரோன்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. தற்போது நாட்டின் வடக்கு எல்லை விமானப்படை தளத்தில் 4 புதிய ஹெரான் மார்க் 2 ட்ரோன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் தயாரிப்பான இவை, வானில் கண்ணுக்கு எட்டாத தொலைவில் 36 மணி நேரம் தொடர்ந்து பறந்து கண்காணிப்பு மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்கும் திறன் வாய்ந்தவை. இந்த புதிய ட்ரோன்கள் குறித்து, ட்ரோன் படைப்பிரிவு தலைமை அதிகாரி விங் கமாண்டர் பங்கஜ் ராணா, ட்ரோன் பைலட் ஸ்குவார்டன் லீடர் அர்பித் டாண்டன் ஆகியோர் கூறியதாவது:

விமானப்படையில் சேர்க்கப்பட்ட புதிய ‘ஹெரான் மார்க் 2’ ட்ரோன்கள்.சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளை கண்காணிப்பதற்காக ஹெரான் மார்க்-2 ட்ரோன்கள் வடக்கு எல்லை விமானப்படை தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மூலம் செயல்படும் இந்த ட்ரோன்கள் வெகு தொலைவில் பறந்தபடி எதிரிகளின் இலக்குகளை கண்டுபிடித்து தகவல் தெரிவிக்கும். இந்த தகவலை வைத்து போர் விமானங்கள் நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் எதிரிகளின் இலக்கு மீது எளிதாக தாக்குதல் நடத்த முடியும்.

இந்த ட்ரோன்கள் மூலம் ஒரே இடத்திலிருந்து நாடு முழுவதையும் கண்காணிக்க முடியும். நீண்ட நேரம் பறக்கும் திறன் வாய்ந்ததால், இந்த ட்ரோன்கள் மூலம் பல பணிகளை மேற்கொள்ளலாம். இந்த ட்ரோன்கள் விமானப்படையின் உளவுப் பணி, கண்காணிப்பு பணியை ஒருங்கிணைக்கிறது. இவற்றின் மூலம் எதிரி இலக்குகளை 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும்.

எந்த காலநிலையிலும், எந்த பகுதியிலும் இந்த டரோன்களை இயக்க முடியும். இதில் உள்ள ஏவியானிக்ஸ் கருவிகள் ஜீரோ டிகிரி வெப்பநிலைக்கு கீழும் செயல்படும் திறன் வாய்ந்தவை. ஒரே நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளை கண்காணிக்க முடியும். வானில் இருந்து தரை இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள், குண்டுகளையும் இதன் மூலம் வீச முடியும். இந்த ட்ரோன்கள் மூலம் இந்திய விமானப்படையின் பலம் மேலும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்திய விமானப்படை ‘ப்ராஜெக்ட் சீத்தா’ என்ற திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் இந்திய பாதுகாப்பு படைகளிடம் உள்ள 70 ஹெரான் ட்ரோன்கள் செயற்கைக்கோள் தகவல் தொடர்புடன் மேம்படுத்தப்படவுள்ளன. ராணுவ தேவைகளுக்கு தகுந்தபடி இதில் பல்வேறு ஆயுதங்களும் பொருத்தப்படவுள்ளன.

முப்படைகளில் 31 ப்ரீடேட்டர் ட்ரோன்களும் சேர்க்கப்படுகின்றன. இவற்றில் 15 ட்ரோன்களை கடற்படை இயக்கவுள்ளது. ராணுவமும், விமானப்படையும் தலா 8 ப்ரீடேட்டர் ட்ரோன்களை பயன்படுத்த உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x