Published : 02 Aug 2023 05:44 AM
Last Updated : 02 Aug 2023 05:44 AM

மகாராஷ்டிராவில் கிரேன் சரிந்து விபத்து: 2 தமிழர்கள் உட்பட 20 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவின் தாணே மாவட்டம், சர்லாம்பே பகுதியில் மேம்பாலம் கட்டும் இடத்தில் சரிந்து விழுந்து கிடக்கும் ராட்சத கிரேன்.

மும்பை: மகாராஷ்டிராவில் பாலம் கட்டும் பணியின்போது கிரேன் சரிந்து 2 தமிழர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் இருந்து நாக்பூரை இணைக்கும் வகையில் 701 கி.மீ. தொலைவுக்கு எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சம்ரித்தி எக்ஸ்பிரஸ் வே என்றழைக்கப்படும் இந்த சாலை 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்து கடந்த ஆண்டு டிசம்பரில் பிரதமர் நரேந்திர மோடி 520 கி.மீ. தொலைவு சாலையை திறந்துவைத்தார். இரண்டாம் கட்டத்தில் 80 கி.மீ. தொலைவு சாலை பணிகள் நிறைவடைந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அண்மையில் திறந்துவைத்தார்.

டிசம்பருக்குள் முடிக்க இலக்கு: மூன்றாம் கட்டமாக நாக்பூரில் இருந்து இகாட்புரி இடையே 101 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியை வரும் டிசம்பருக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக சாலை பணிகள் இரவு, பகலாக நடைபெற்று வருகின்றன.

2.28 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலம்: சாலை திட்டத்தின் ஒரு பகுதி யாக தாணே மாவட்டம், சர்லாம்பே பகுதியில் 2.28 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பால பணியை நவயுகா இன்ஜினீயரிங் கம்பெனி டெண்டர் எடுத்து சிங்கப்பூரை சேர்ந்த எஸ்.எல். இண்டியா பிரைவேட் நிறுவனத்திடம் கட்டுமானப் பணியை ஒப்படைத்தது. இரவு பகலாக பாலம் கட்டும் பணி வேகமாக நடைபெற்று வந்தது.

17 தொழிலாளர்கள், 4 இன்ஜினீயர்கள், 7 நிர்வாக அலுவலர்கள் நேற்று முன்தினம் இரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். பாலத்தின் உயரம் சுமார் 6 மாடிகளுக்கு இணையானது. அந்த உயரத்துக்கு கிரேன் மூலம் கட்டுமான பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது நள்ளிர வில் எதிர்பாராத விதமாக ராட்சத கிரேன் சரிந்து விழுந்தது.

இதில் எஸ்.எல். இண்டியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்த தமிழகத்தின் கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ், திருவள்ளூரை சேர்ந்த கண்ணன் உட்பட 20 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

ரூ.7 லட்சம் இழப்பீடு: தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.

மேலும் விபத்தில் உயிரிழந்த வர்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காய மடைந்தவர்களுக்கான சிகிச்சை செலவை அரசே ஏற்றுக் கொள்ளும்என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

பிரதமர் இரங்கல்: பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “மகாராஷ்டிராவில் ஏற்பட்ட விபத்து மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலாரூ.50,000-ம் இழப்பீடு வழங்கப் படும். உயிரிழந்தவர்களின் குடும் பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், உள்ளூர் நிர்வாகம் விரைவாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x