Published : 14 Nov 2017 11:02 AM
Last Updated : 14 Nov 2017 11:02 AM

டெல்லியில் காற்று மாசு சற்று குறைந்ததால் மக்கள் நிம்மதி

டெல்லியில் கடந்த சில தினங்களாக கடும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த காற்று மாசு, சற்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் காற்று மாசு காணப்படுகிறது. காற்று தரக் குறியீடு (ஏக்யூஐ) பல இடங்களில் 500க்கும் அதிகமாக சென்றதால் 200 மீட்டருக்கு அப்பால் உள்ள எதையும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. பனி மூட்டம் போன்று காற்று மாசு சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

டெல்லி மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள ஹரியாணா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உட்பட அண்டை மாநிலங்களிலின் சில பகுதிகளிலும் காற்று மாசு காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று மாலை முதல் டெல்லியில் பல பகுதிகளில் காற்று மாசு சற்று குறைந்துள்ளது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி டெல்லியின் பல பகுதிகளில் பதிவான காற்று மாசு அளவு (ஏக்யூஐ) 460 ஆக இருந்தது. பின்னர் நேற்று இரவு 9 மணியளவில் 337 என் அளவி் சராசரி காற்று மாசு பதிவானது.

இந்நிலையில் காற்று தர ஆய்வு மற்றும் வானிலை முன்னறிவிப்பு அமைப்பு கூறுகையில் ‘‘டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முதல் காற்று மாசு அளவு சற்று குறைந்துள்ளது. இதனால் இன்றும் (செவ்வாய் கிழமை) காற்று மாசு அளவு வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. அதற்கு சாதகமான சூழல் தெரிகிறது’’ எனக் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x