Published : 28 Jul 2023 03:07 PM
Last Updated : 28 Jul 2023 03:07 PM

அமளிக்கு மத்தியில் 3 மசோதாக்கள் நிறைவேற்றம்: மக்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு

புதுடெல்லி: மணிப்பூர் குறித்த எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் மூன்று முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், மக்களவையும் திங்கள்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.

மழைக்காலக் கூட்டத் தொடரின் 7-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலை 11 மணிக்கு மீண்டும் கூடியது. மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்துடன் அவையைத் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. கேள்வி நேரத்துக்கு எதிர்க்கட்சிகள் இடையூறு ஏற்படுத்திய நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவை மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.

மசோதா நிறைவேற்றமும் சபை ஒத்திவைப்பும்: இதனைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மக்களவை மீண்டும் கூடியது. அப்போதும் மணிப்பூர் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. என்றாலும் மக்களவை அலுவல்களுக்கான தாள்கள் மேஜையில் வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து எதிக்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் சுரங்கங்கள் மற்றும் கனிமவளங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை திருத்தம்) மசோதா 2023, தேசிய செவிலியர் மற்றும் மருத்துவர் ஆணைய மசோதா 2023, தேசிய பல்மருத்துவ ஆணைய மசோதா 2023 ஆகிய மூன்று முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

அதேபோல், இந்திய மேலாண்மை நிறுவனங்கள் சட்டம் 2017 - திருத்துவதற்கான மசோதாவும் சபையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்களவையும் திங்கள்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களை நாள் முழுவதும் ஒத்திவைப்பு: மாநிலங்களவை காலையில் சற்றே அமைதியுடன் தொடங்கியது. அவைத் தொடங்கியதும் அவைத்தலைவர் ஜக்தீப் தன்கர் பிறந்தநாள் கொண்டாடும் உறுப்பினருக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து ஒய்வு பெற இருக்கும் உறுப்பினருக்கு பிரியாவிடை குறிப்பும் வாசித்தார். தொடர்ந்து அவைக்கு விதி 267 -ன் கீழ் மணிப்பூர் குறித்து விவாதிக்க 47 நோட்டீஸ் வந்துள்ளதாக அவைத் தலைவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் குறுகிய கால விவாதத்தினை தான் ஏற்றுக் கொண்டதாகவும், அரசும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் மீண்டும் தெளிவுபடுத்திய அவைத் தலைவர், கட்சி நலன்களுக்கு அப்பாற்பட்டு இந்த விஷயத்தில் தான் ஏற்றுக் கொண்டது போல குறுகிய கால விவாதத்திற்கு ஒத்துழைக்குமாறு எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொண்டார்.

நாடகங்களை உருவாக்காதீர்கள்: தொடர்ந்து இதுவரை மிகக்குறைவான அளவிலேயே விதி 267-ன் கீழ் விவாதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்று ஜக்தீப் தன்கர் தெரிவித்தார். அப்போது இடைமறித்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஓ பிரையான், "அது எங்களுக்கும் தெரியும்" என்றார். அதனைத் தொடர்ந்து இருவருக்குமான விவாதம் சூடுபிடிக்க, "காதுகளைத் திறந்து அமைதியாக உங்கள் இருக்கையில் அமருங்கள்” என்று ஓ.பிரையானிடம் அவைத் தலைவர் தெரிவித்தார்.

இதனிடையே மேஜையில் ஓங்கிக் குத்திய படி திரிணமூல் எம்.பி தொடர்ந்து பேச முயலும்போது அவைத் தலைவர் , "டெரிக் ஓ பிரையன் நாடகங்களை உருவாக்குவது உங்களுடைய பழக்கமாகிவிட்டது. ஒவ்வொருமுறையும் வேகமாக முந்திக்கொண்டு எழுவது உங்களுடைய தனிச் சிறப்பு என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நீங்கள் காட்டவேண்டிய குறைந்தபட்ட விஷயம் அவைத் தலைமைக்கு மரியாதை தருவது. நான் ஏதாவது சொல்லும்போது நீங்கள் கொதித்தெழுந்து ஒரு நாடகத்தை உருவாக்குகிறீர்கள்" என்றார்.

அவைத் தலைவரின் நாடகம் என்ற பேச்சுக்கு கடுமையான எதிப்புத் தெரிவித்த பிரையன், “நான் நாடகங்களை உருவாக்கவில்லை. நான் சபை விதிகளையே மேற்கோள் காட்டுகிறேன். மணிப்பூர் விவகாரத்தில் விதி 267 தீவிரமான விவாதம் அவசியம்” என்றார். இதனைத் தொடர்ந்து அவைத்தலைவர் மாநிலங்களையைத் திங்கள்கிழமை காலை வரை ஒத்திவைத்தார்.

எதிர்க்கட்சிகள் மீது விமர்சனம்: இதனிடையே எதிர்க்கட்சிகள் அவையை அமைதியாக நடத்த விடுவதில்லை என்று நாடாளுமன்றங்களுக்கான விவாகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "அவர்கள் (எதிர்க்கட்சிகள்) அமைதியான முறையில் விவாதத்தில் பங்கேற்பதில்லை, அவையில் எந்த மசோதாவையும் நிறைவேற்ற ஒத்துழைப்பதில்லை.

நாங்கள் அவர்களிடமிருந்து ஆக்கபூர்வமான பரிந்துரைகளை எதிர்ப்பார்க்கிறோம். ஆனால், அவர்கள் திடீரென நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். தேவை ஏற்படும் போது நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது விவாதம் நடத்துவோம். எங்களிடம் பெரும்பான்மை உள்ளது. அதனால் எங்களுக்கு கவலையில்லை. மணிப்பூர் விவாகரம் குறித்த உண்மை வெளிவர வேண்டும் என்று அவர்கள் விரும்பினால், அதற்கு நாடாளுமன்றத்தை விட சிறந்த இடம் எதுவுமில்லை" என்று அவர் தெரிவித்தார்.

7 நாட்களாக முடங்கிய நாடாளுமன்றம்: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த வாரம் வியாழக்கிழமை (ஜூலை 20) தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதல் மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவாகரம் குறித்து பிரதமர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சியின் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.

குறுகிய நேரத்தில் விவாதிக்க தயார் என அரசு தரப்பில் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. மணிப்பூர் விவாகரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து 7 நாட்களாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x