Last Updated : 10 Nov, 2017 04:02 PM

 

Published : 10 Nov 2017 04:02 PM
Last Updated : 10 Nov 2017 04:02 PM

திப்பு ஜெயந்திக்காக கர்நாடகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

வலது சாரிகளின் பலத்த எதிர்ப்பையடுத்து, திப்பு ஜெயந்திக்காக கர்நாடகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பெங்களூரு, குடகு, மாண்டியா, மைசூரு, மங்களூரு ஆகிய இடங்களில் காவல் துறையினரோடு, துணை ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

‘மைசூரு புலி' என அழைக்கப்படும் திப்பு சுல்தானின் பிறந்த நாளை (நவம்பர் 10) திப்பு ஜெயந்தி என்ற பெயரில் கர்நாடக அரசு கடந்த 3 ஆண்டுகளாக கொண்டாடி வருகிறது.

இதற்கு இந்துத்துவ அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் திட்டமிட்டபடி இன்று பெங்களூருவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் திப்பு ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் தலைமையில் இவ்விழா நடைபெறுகிறது.

பாஜக, ஆர்எஸ்எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் திப்பு ஜெயந்தி கொண்டாடுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் பெங்களூரு, மங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்துப் பேசிய கூடுதல் டிஜிபி கமல் பண்ட், மதுபான விற்பனை இன்று தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் முதல்வர் சித்தராமையா, 'திப்பு சுல்தான் ஜெயந்தி' விழாவை மாநிலத் தலைமைச் செயலகத்தில் மாலை 6.30 மணி அளவில் தொடங்கி வைக்கிறார். இதையொட்டி குடகு மாவட்டத்தில் உள்ள மடிக்கேரி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மற்ற இடங்களுக்கும் தடையுத்தரவு பிறப்பிக்கப்படும் நிலை உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x