Published : 25 Jul 2023 01:54 PM
Last Updated : 25 Jul 2023 01:54 PM

“கிழக்கிந்திய கம்பெனி, இந்தியன் முஜாகிதீனிலும் கூட ‘இண்டியா’ இருக்கிறது” - எதிர்க்கட்சி அணி மீது பிரதமர் மோடி தாக்கு

பிரதமர் மோடி | கோப்புப்படம்

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் ‘இண்டியா’ என்ற பெயர் குறித்து பேசியுள்ள பிரதமர் மோடி, ‘இந்தியன் முஜாகிதீன், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவிலும் கூட ‘இண்டியா’ என்ற பெயர் உள்ளதாக கேலி செய்துள்ளார். மேலும், தொடர்ந்து நாடாளுமன்றத்தை முடக்கி வரும் எதிர்க்கட்சியினரைத் “திக்கற்றவர்கள்” (directionless) என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

பாஜக எம்.பி.க்களின் வாராந்திர கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதில் அவர் பேசும்போது, "இதுநாள் வரையில் நான் இதுபோன்ற திக்கற்ற எதிர்க்கட்சியினரைப் பார்த்தது இல்லை. ‘இண்டியா’ என்ற பெயருக்காக அவர்கள் தங்களையே புகழ்ந்து கொள்கிறார்கள். கிழக்கிந்திய கம்பெனி, இந்தியன் முஜாகிதீன், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா போன்றவற்றிலும் இந்தியா என்ற பெயர் இருக்கிறாது. அதனால், ‘இண்டியா’ என்ற பெயரால் ஒன்றும் ஆகிவிடாது. நாட்டின் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு மக்களை தவறாக வழிநடத்த முடியாது.

தோல்வி, சோர்வு, நம்பிக்கையின்மை போன்றவற்றால் மோடியை எதிர்ப்பது ஒற்றையே கொள்கையாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் எதிர்க்கட்சிகளாக மட்டுமே இருக்க முடிவு செய்திருப்பதையே அவர்களின் நடத்தை காட்டுகிறது. வரும் 2024 மக்களவைத் தேர்தலில் மக்களின் ஆதரவுடன் பாஜக எளிதில் வெற்றி பெறும்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் ‘மணிப்பூர் மாநில கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பிறகு இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும்’ என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனால் வியாழக்கிழமை தொடங்கி நேற்று வரையிலான மூன்று நாள்களிலும் எந்தவிதமான அலுவல்களும் நடக்கவில்லை. இந்தப் பின்னணியில் பிரதமர் மோடியின் எதிர்க்கட்சிகள் மீதான இந்த விமர்சனம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற கூட்டத் தொடர்: நாடாளுமன்ற மழைக்கால கூடத்தொடர் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. அடுத்த மாதம் 4-ம் தேதி வரை கூட்டத்தொடர் நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில், இந்தக்கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம், மத்திய அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இதனிடையே மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக புதன்கிழமை மணிப்பூரில் இரண்டு பழங்குடியினப் பெண்களை நூற்றுக்கணக்கான ஆண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச்செல்லும் வீடியோ ஒன்று வெளியாக நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மணிப்பூர் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இரு அவைகளும் ஒத்திவைப்பு: இதனிடையே, மக்களவை இன்று 4-வது நாளாக கூடியதும் மணிப்பூர் வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சிகள் முழக்கங்கள் எழுப்பின. சபாநாயகர் ஓம் பிர்லா அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை அமைதிகாத்து இருக்கையில் அமருமாறும் கூறினார். அவையில் தொடர்ந்து கூச்சலிடுவதால் எந்தத் தீர்வும் கிடைக்காது என்றும், முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கேள்வி நேரத்தை அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பவே, சபாநாயகர் அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். அதேபோல் மாநிலங்களவையிலும் அமளி நீடித்ததால் அவையை 12 மணி வரை அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஒத்திவைத்தார்.

'36 விநாடிகள் பேசிய பிரதமர்' - முன்னதாக நாடாளுமன்ற கூட்டுத் தொடர் தொடங்கும் முன்பாக பேசிய பிரதமர் மோடி, "மணிப்பூரில் நடந்துள்ள சம்பவம் நாகரிக சமூகத்துக்கான அவமானம். இதற்காக நாடு வெட்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க கடுமையான சட்டங்களை இயற்றும்படி நான் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தச் சம்பவம் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மணிப்பூர் எங்கு வேண்டுமானாலும் நடந்திருக்கலாம், குற்றவாளிகள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் தப்பக் கூடாது. நான் நாட்டுக்கு உறுதியளிக்கிறேன். சட்டம் அதன் முழு பலத்துடன் தனது கடமையைச் செய்யும். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்தது மன்னிக்க முடியாதது" என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

வெறும் 36 விநாடிகளில் ஒரு பிரச்சினையைப் பற்றி பிரதமர் பேசிச் சென்றதாக எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதோடு நாடாளுமன்றத்தில் அவர் விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.

நம்பிக்கையில்லா தீர்மானம்: இந்த நிலையில், நாடாளுமன்றத்தை தொடர்ந்து நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்பிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் தங்களது கோரிக்கையில் இருந்து எதிர்க்கட்சிகள் பின்வாங்கப் போவது இல்லை என்பதால், அமளிகளுக்கு இடையில் அலுவல்களை நடத்த அரசு முடிவெடுத்திருந்தது. இதனிடையே இண்டியா கூட்டணி மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடைசியாக கடந்த 2003-ம் ஆண்டு வாஜ்பாய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. வாசிக்க > மணிப்பூர் கொடூரம் | அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டம்?

எதிர்க்கட்சிகளின் இண்டியா: வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒன்றுபட்டு செயல்பட எதிர்க்கட்சிகளின் முன்னணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் கடந்த மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் நடந்தது. அதில் 26 எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கு, இந்திய தேசிய உள்ளடங்கிய வளர்ச்சி கூட்டணி என பொருள்படும்படி ‘இண்டியா’ என்று பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x