Published : 23 Nov 2017 09:02 AM
Last Updated : 23 Nov 2017 09:02 AM

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கு ஊதிய உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கு ஊதிய உயர்வு அளிக்கும் பரிந்துரைக்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.

ஊதிய உயர்வு தொடர்பாக நேற்று ஒப்புதல் தரப்பட்ட பரிந்துரைப்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ரூ.2.80 லட்சம், உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு ரூ.2.50 லட்சம் மாத ஊதியம் கிடைக்கும்

உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு மாத ஊதியமாக ரூ.2.25 லட்சம் கிடைக்கும் என மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த ஊதிய உயர்வும் ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கான உயர்த்தப்பட்ட ஓய்வூதியமும் 2016-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தற்போது எல்லா பிடித்தங்களும் போக மாதம் ரூ.1.5 லட்சம் ஊதியம் பெறுகின்றனர். உயர் நீதிமன்ற நீதிபதிகள் இதை விட குறைவான ஊதியம் பெறுகின்றனர். உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு சற்று கூடுதல் ஊதியம் வழங்கப்படுகிறது. அத்துடன் நீதிபதிகள் பணியில் இருக்கும் போது வாடகையில்லா வீடு ஒதுக்கப்படுகிறது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.எஸ்.தாக்குர் பதவி வகித்த போது, உச்ச நீதிமன்ற, நாட்டில் உள்ள 24 உயர் நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகளின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று கடந்த 2016-ம் ஆண்டு பரிந்துரை செய்திருந்தார். அந்தப் பரிந்துரை மத்திய அரசின் பரிசீலனையில் இருந்தது.

இந்நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் நீதிபதிகளுக்கு ஊதிய உயர்வு அளிப்பதற்கான பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதுகுறித்து மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, ‘‘நீதிபதிகளுக்கு ஊதிய உயர்வு அளிப்பதற்கு வகை செய்யும் மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்’’ என்றார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x