Published : 14 Jul 2023 05:08 AM
Last Updated : 14 Jul 2023 05:08 AM

எதிர்க்கட்சிகளின் பெங்களூரு கூட்டத்தில் 24 கட்சிகள் பங்கேற்பு: தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கிறார் சோனியா

பெங்களூரு: பெங்களூருவில் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 24 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள திட்டமிட்டுள்ளன. இதன்படி எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூன் 23ம் தேதி பாட்னாவில் நடைபெற்றது. இதில் திமுக உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் வருகிற 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள‌து. இதற்
கான ஏற்பாடுகளை கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டி.கே.சிவகுமார் செய்துவருகிறார்.

இதுகுறித்து காங்கிரஸ் மேலிடத் தலைவர்களிடம் விசாரித்தபோது, ''பெங்களூருவில் நடைபெறும் 2-வது ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் சில கட்சிகள் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. இதில் மொத்தம் 24 கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். மதிமுக, விசிக, கொதேமக, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அனைத்து இந்திய ஃபார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (மணி) ஆகிய கட்சிகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

காங்கிரஸ் தேசிய தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே 24 கட்சிகளின் தலைவர்களுக்கும் பெங்களூரு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு க‌டிதம் எழுதியுள்ளார்.

பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆர்.ஜே.டி மூத்த‌ தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் தங்களின் பயணத்தை உறுதி செய்துள்ளனர்.

டெல்லியின் அதிகாரம் குறித்த மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிரான காங்கிரஸ் ஆதரவு விவகாரத்தில் ஆம் ஆத்மிக்கும் காங்கிரஸூக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருப்பினும் இரண்டாவது கூட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் அக்கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான‌ அர்விந்த் கேஜ்ரிவாலும் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தியும் கலந்துகொள்கிறார். அவர் ஜூலை 17-ம் தேதி மாலை 6 மணிக்கு பெங்களூருவில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 24 கட்சிகளின் தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கிறார். இதைத் தொடர்ந்து 18-ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x