Published : 10 Jul 2023 05:41 AM
Last Updated : 10 Jul 2023 05:41 AM

தே.ஜ.கூட்டணி கட்சிகள் ஜூலை 18-ல் ஆலோசனை: அஜித் பவாரின் என்சிபி, ஷிண்டேவின் சிவசேனா பங்கேற்க வாய்ப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் வரும் 18-ம் தேதி நடக்க உள்ளது. இதில் அஜித் பவாரின் என்சிபி மற்றும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவை தேர்தல் 2024 மார்ச், ஏப்ரலில் நடக்க உள்ளது. இதில், 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) தலைமை வகிக்கும் பாஜக தீவிரமாக உள்ளது.

அதேநேரம், வரும் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக, என்டிஏ கூட்டணியில் இல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார். பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் பரிசீலித்து வருகின்றனர்.

இந்நிலையில், என்டிஏ கூட்டணியை பலப்படுத்துவதுடன், விரிவாக்க வேண்டியதும் அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வலியுறுத்தினார்.

இந்த சூழ்நிலையில், என்டிஏ கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் வரும் 18-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மக்களவை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) பங்கேற்கும் என்று தெரிகிறது. இந்த 2 கட்சிகளின் வருகையால், 48 மக்களவை தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் என்டிஏ கூட்டணி வலுவடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுபோல முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம், ஓம் பிரகாஷ் ராஜ்பரின் சுஹல்தேவ் சமாஜ் கட்சி, முகேஷ் சஹானி தலைமையிலான விகாஷீல் இன்சான் கட்சியும் பங்கேற்க உள்ளன.

சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜன்சக்தி கட்சியும் (ராம் விலாஸ்), பிஹாரில் ஆளும் மெகா கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகிய முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி தலைமையிலான இந்துஸ்தான் அவாம் மோர்ச்சாவும் என்டிஏ கூட்டத்தில் பங்கேற்கும் என தெரிகிறது.

மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராயை சிராக் பாஸ்வான் நேற்று பாட்னாவில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘பாஜக கூட்டணியில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது’’ என்றார். சிராக் பாஸ்வானின் சித்தப்பாவும், ராஷ்ட்ரியலோக் ஜன்சக்தி தலைவருமான பசுபதிகுமார் பராஸ் மத்தியஅமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறிய தெலுங்கு தேசம் மற்றும் சிரோமணி அகாலி தளம் ஆகிய கட்சிகளுடனும் பாஜக தலைவர்கள் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x