Published : 28 Jun 2023 06:08 AM
Last Updated : 28 Jun 2023 06:08 AM

1.45 லட்சம் கி.மீ. சாலை விரிவாக்கம் | உலகளவில் இந்தியா 2-ம் இடம்: சீனாவை பின்னுக்குத் தள்ளியது

புதுடெல்லி: கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து இதுவரையில் 1.45 லட்சம் கி.மீ. அளவுக்கு சாலை விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, மிக நீண்ட சாலைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: பாஜக அரசு பொறுப்பேற்ற 2014-ம் ஆண்டு முதல் இதுவரையில் கூடுதலாக 1.45 லட்சம் கி.மீ. அளவுக்கு சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, சாலை வசதியில் இரண்டாவது இடத்தில் இருந்த சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது. சாலை வசதியில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா2-வது இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் ஏராளமான கிரீன்பீல்டு எக்ஸ்பிரஸ்வே சாலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மிகநீண்ட டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே சாலை கட்டமைப்பு பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) ஏறக்குறைய இறுதி செய்துள்ளது.

9 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவின் சாலை நெட்வொர்க் 91,287 கி.மீ. ஆக இருந்தது. கடந்தசில ஆண்டுகளில் எக்ஸ்பிரஸ்வேஸ் மற்றும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க திட்டங்கள் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டன. 2019 ஏப்ரலில் இருந்து என்எச்ஏஐ 30,000 கி.மீ. அதிகமான நெடுஞ்சாலைகளை நாடு முழுவதும் அமைத்துள்ளன.

அதன் விளைவாக, 9 ஆண்டுகளுக்கு முன்பாக ரூ.4,770 கோடியாக இருந்த சுங்க கட்டண வசூல் இன்று ரூ.41,342 கோடியாக அதிகரித்துள்ளது. இதனை ரூ.1.30 லட்சம்கோடியாக உயர்த்துவதே மத்திய அரசின் தற்போதைய இலக்கு. இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x