Last Updated : 17 Jul, 2014 12:04 PM

 

Published : 17 Jul 2014 12:04 PM
Last Updated : 17 Jul 2014 12:04 PM

நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை: கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும் என புதன்கிழமை கர்நாடக உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு சாமியார் நித்யானந்தா தொடர்பான வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து நித்யானந்தா மீது அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் சீடரான ஆர்த்தி ராவ் என்பவர் ராம்நகர் போலீஸில் பாலியல் பலாத்கார‌ புகாரை ரகசியமாக கொடுத்தார். வழக்கு பதிவு செய்த போலீஸார் 2012-ம் ஆண்டு சுமார் 1,500 பக்க அளவிலான குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

ஆர்த்தி ராவ் புகார் விஸ்வரூபம் எடுத்ததால், நித்யானந்தாவிற்கு எதிராக கன்னட அமைப்புகள் தொடர் போராட்டத்தில் குதித்தன.இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு மைசூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

நித்யானந்தா மீது பாலியல் பலாத்கார புகார் பதிவானதால், ராம்நகர் போலீஸார் அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய முடிவெடுத்தனர். இதற்கு நித்யானந்தா ‘தான் ஓர் ஆன்மீக குரு. ஆதலால் ஆண்மை பரிசோதனை செய்து, இந்து மதத் திற்கும் அதன் பக்தர்களுக்கும் அவமானம் ஏற்படுத்த கூடாது' என கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

எனவே போலீஸார் ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ‘நித்யானந்தாவிற்கு ஆண்மை பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும்' என மனு தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அவருக்கு ஆண்மை பரிசோதனை உள்ளிட்ட அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் செய்ய உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றம் உத்தரவு

ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நித்யானந்தா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இவ்வழக்கில் கடந்த இரு ஆண்டுகளாக இரு தரப்பு வாதமும் நடைபெற்று, முடிவடைந்தது.

இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சத்ய நாராயணா முன்னிலையில் புதன் கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘நித்யானந்தா மீது பாலியல் பலாத்கார புகார் பதிவாகி இருப்பதால் ஆண்மை பரிசோதனை உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவ பரிசோத னைக்கும் அவர் ஒத்துழைக்க வேண்டும். எனவே, ராம்நகர் போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவ பரிசோதனை நடைபெறுவதற்கு எவ்வித தடையும் விதிக்க முடியாது. மேலும் வழக்கை விரைந்து முடிக்க அவர் ஒத்துழைக்க வேண்டும்’ என நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x