Published : 24 Jun 2023 05:58 AM
Last Updated : 24 Jun 2023 05:58 AM

குவாலியர் அருகே பயணிகள் கண்ணெதிரில் இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி

போபால்: தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் 32 வயது இளம்பெண்ணும் 22 வயது இளைஞரும் கடந்த 19-ம் தேதி உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து குஜராத் மாநிலம் செல்ல ரயிலில் ஏறினர்.

ஆனால், இணைப்பு ரயிலை தவறவிட்டதால், மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் ரயில் நிலையத்தில் இரவு 10 மணிக்கு, சூரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பொதுப் பெட்டியில் ஏறினர். ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த பெட்டியில் இருந்த 3 பேர் அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டனர். அவரது ஆடைகளை களைந்து கூட்டு பலாத்காரத்துக்கு முயன்றனர். அதை இளம்பெண்ணுடன் வந்த இளைஞர் தட்டிக் கேட்டார்.

அதில் ஆத்திரம் அடைந்த மர்ம கும்பல், இளம்பெண்ணின் ஆடைகளை கிழித்து ஓடும் ரயிலில் இருந்து வெளியில் தள்ளியது. அந்த இளைஞரையும் ரயிலில் இருந்து தள்ளி விட்டது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் தன்னுடைய கிழிந்த உடைகளை அந்தப் பெண்ணுக்கு உடுத்தி 5 கி.மீ. தூரம் அடர்ந்த காட்டுப் பகுதியில் தூக்கிச் சென்றார் இளைஞர். வழியில் 2 கிராமங்களில் அவர்களுக்கு மக்கள் உதவி செய்ய முன்வரவில்லை.

அதன்பின் சிறிது தூரம் சென்ற போது வேறொரு கிராமத்தில் இருந்து வயதான தம்பதி அவர்களுக்கு உதவி செய்தது. வீட்டுக்குள் அழைத்து சென்று அந்தப் பெண்ணுக்கு சேலை கொடுத்து, மருத்துவமனைக்கு செல்லவும் அவர்கள் உதவியுள்ளனர். தற்போது இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் தகவல் அறிந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற ரயில் பாதை பகுதியில் சிசிடிவி கேமராக்கள் மூலம் மர்ம நபர்களை அடையாளம் காண முயற்சி மேற்கொண்டுள்ளனர். மேலும், நேரில் பார்த்தவர்கள் மூலம் உண்மை தகவலை அறிய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால், பொதுப் பெட்டியில் பயணம் செய்தவர்களில் ஒருவர் கூட போலீஸிடம் தகவல் அளிக்க முன்வரவில்லை. எனினும் 2 முதியவர்கள் மட்டும் போலீஸ் விசாரணைக்கு உதவ முன்வந்துள்ளனர்.

‘‘ரயிலின் பொதுப் பெட்டியில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். மர்ம கும்பல் செய்த சித்திரவதைகளைப் பார்த்துக் கொண்டு அனைவரும் அமைதியாக இருந்தனர். ஒருவர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை’’ என்று பாதிக்கப்பட்ட இளைஞர் போலீஸில் கூறியுள்ளார்.

பெண்கள் பாதுகாப்புக்கு ரயில் மதத், மேரி சஹேலி செயலி: ரயில்வே பாதுகாப்பு படை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரயிலில் பெண் பயணிகள் ஏதேனும் அசம்பாவிதம் நடக்க போவதை உணர்ந்தால், 139 என்ற உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இது தவிர, ரயில் மதத் (Rail Madad - ரயில் உதவி) செயலி மூலமாகவோ இணையதளம் மூலமாகவோ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேரி சஹேலி (Meri Saheli - எனது தோழி) என்ற செயலி மூலமாக பெண் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்த செயலியின் கீழ் 6000க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் ஆர்பிஎப் பெண் அதிகாரிகள், காவலர்கள் அடங்கிய 17 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பயணத்தின் பொழுது பெண்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக அவர்களுக்கு ஆர்பிஎப் மூலமாக உதவி கிடைக்க வழி வகை செய்யப்படும். ரயில் புறப்படும் இடத்தில் 5 பெண்கள் கொண்ட ரயில்வே பாதுகாப்பு படை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பெண்களின் பாதுகாப்புக்கு இந்தப் படையினர் நடவடிக்கை எடுப்பார்கள். ரயில்வே பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டு அறை எண் 182 ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்’’ என்றார்.

தமிழக ரயில்வே காவல் துறை சார்பில் பெண் பயணிகள் பாதுகாப்புக்காக 1512 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தவிர 99625 00500 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அதன்பின் பெண்கள் பயணிக்கும் இடத்தின் அருகே உள்ள ரயில் நிலையத்தை தொடர்பு கொண்டு உடனடியாக ரயில்வே போலீஸார் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தமிழக ரயில்வே காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x