Published : 24 Oct 2017 04:51 PM
Last Updated : 24 Oct 2017 04:51 PM

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான ஜிஎஸ்டி அபராதம் தள்ளுபடி: அருண் ஜேட்லி

ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, கடந்த ஜூலையில் அமலுக்கு வந்தது. இதன்படி, ஜிஎஸ்டி வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு குறிப்பிட்ட நாட்களுக்குள் தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

ஜிஎஸ்டி வரி கணக்கைத் தாக்கல் செய்யாதவர்களுக்கு முதல் மாதமான ஜூலை மட்டும், அபராதத்திலிருந்து விலக்கு அளிக்க ஜிஎஸ்டி ஆணையம் பரிந்துரைத்திருந்தது. இதை ஏற்று மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களிலும், ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி, ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி , ''ஜிஎஸ்டி கணக்கு தாமதமாக தாக்கல் செய்பவர்களுக்கான அபராதத் தொகை ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளுபடி செய்யப்படும்'' எனக் கூறியுள்ளார்.

குறிப்பிட்ட நாட்களுக்குள் ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள், மத்திய மற்றும் மாநில ஜிஎஸ்டிக்கு, நாள்தோறும், தலா 100 ரூபாய் வீதம் அபராதம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x