Published : 15 Oct 2017 10:53 AM
Last Updated : 15 Oct 2017 10:53 AM
ஆர்எஸ்எஸ் அமைப்பில் ‘ஷார்ட்ஸ்’ அணிந்த பெண்களை தான் கண்டதில்லை என்று ராகுல் காந்தி கூறியிருப்பதற்கு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சீருடையாக வெள்ளை சட்டையும் காக்கி டிரவுசரும் அணிந்து வருகின்றனர். இந்நிலையில் பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக காங்கிரஸ் அண்மையில் குற்றம் சாட்டியது. இது தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, “பாஜகவின் தாய் அமைப்பாக ஆர்எஸ்எஸ் கருதப்படுகிறது. இந்த அமைப்பில் எத்தனை பெண்கள் உள்ளனர்? ஷார்ட்ஸ் அணிந்த பெண்களுடன் ஆர்எஸ்எஸ் பிரிவை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அப்படி யாரையும் நான் பார்த்ததில்லை” என்றார்.
இது தொடர்பாக சுஷ்மா ஸ்வராஜ் நேற்று கூறும்போது, “அரசியல்வாதிகள் பேசக்கூடாத வார்த்தைகளை ராகுல் பேசுகிறார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் பெண்கள் ஏன் ஷார்ட்ஸ் அணிய அனுமதிக்கப்படுவதில்லை என்று ராகுல் கேட்டிருந்தால் நான் நிச்சயம் பதில் அளித்திருப்பேன். ஆனால் பொருத்தமற்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருப்பதால் பதில் அளிப்பதற்கு தகுதிவாய்ந்த கேள்வியாக இதை நான் கருதவில்லை. பாஜகவை பெண்களுக்கு எதிரான கட்சியாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் நாட்டுக்கு 4 பெண் முதல்வர்கள், 4 பெண் ஆளுநர்களை பாஜக கொடுத்துள்ளது. தற்போது மத்தியில் 4 பெண்கள் கேபினட் அமைச்சர்களாக உள்ளனர். பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவில் இதற்கு முன் பெண் அமைச்சர்கள் இடம்பெற்றதில்லை. 4 உறுப்பினர்கள் கொண்ட இந்தக் குழுவில் எங்கள் அரசில் 2 பெண் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்” என்றார்.
ராகுல் பேச்சு குறித்து ஆர்எஸ்எஸ் கூறும்போது, “எங்கள் அமைப்பு குறித்து புரிதல் இல்லாதவர்கள் எழுதித் தரும் உரையை ராகுல் வாசிக்கிறார்” என்று தெரிவித்துள்ளது.
“ராகுல் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT