Published : 22 Oct 2017 11:31 AM
Last Updated : 22 Oct 2017 11:31 AM
காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், ராணுவ போர்ட்டர் ஒருவர் பலியானார். இளம்பெண் படுகாயம் அடைந்தார்.
காஷ்மீர் எல்லையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் உள்ளது. எனினும், ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து எல்லையில் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் பாரமுல்லா மாவட்டம் கமால்கோட் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகே பாகிஸ்தான் படையினர் நேற்று சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் இந்திய ராணுவத்துக்கு சுமை தூக்கியாக (போர்ட்டர்) பணியாற்றிய ஒருவர் பரிதாபமாக இறந்தார். மேலும், இளம்பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவர் யுரி நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய தரப்பில் சரியான பதிலடி கொடுக்கப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘இந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி 600 முறைக்கு மேல் இந்திய பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிகமான அத்துமீறலாகும்’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே 3,323 கி.மீ. தூரம் எல்லை பகுதி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் 221 கி.மீ. தூரம் சர்வதேச எல்லையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT