Published : 09 Jun 2023 10:41 PM
Last Updated : 09 Jun 2023 10:41 PM

முதல்வர் அலுவலகம் டு பிரதமர் அலுவலகம் ... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மருமகனின் பின்னணி?

பெங்களூரு: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மருமகன் பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிபவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிர்மலா சீதாராமனின் ஒரே மகள் பரகலா வங்கமயிக்கும், பிரதீக் தோஷி என்ற இளைஞருக்கும் பெங்களூருவில் நேற்று (ஜூன் 8) திருமணம் நடைபெற்றது. பெங்களூருவின் ஜெயநகரில் உள்ள நிர்மலா சீதாராமனின் வீட்டில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், விஐபிகள் என யாருமே இதில் பங்கேற்கவில்லை. எளிய முறையில் தனது மகளின் திருமணத்தை நிர்மலா சீதாராமன் நடத்தி உள்ளார்.

பிராமண சமூக முறைப்படியும், உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா அதமரு மடத்தின் தலைவர் விஸ்வபிரிய தீர்த்த ஸ்ரீபாத-வின் ஆசீர்வாதத்துடனும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது இளஞ்சிவப்பு நிற புடவையை மணமகள் அணிந்திருந்தார். மணமகன் பஞ்சகச்சம் அணிந்திருந்தார். மணமகளின் தாயாரான நிர்மலா சீதாராமன் நீல நிற மொலகல்முரு புடவையை அணிந்திருந்தார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர் என்று சொல்லப்படுகிறது.

தொழில்முறை பத்திரிகையாளரான பரகலா வங்கமயி, மிண்ட் பத்திரிகையில் தற்போது பணியாற்றி வருகிறார். டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்ஏ ஆங்கிலம் முடித்துள்ள அவர், போஸ்டன் பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்துள்ளார்.

அதேநேரம் மணமகன் பிரதீக் தோஷி பிரதமரின் அலுவகத்தில் பணிபுரிகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. குஜராத்தைச் சேர்ந்த பிரதீக் தோஷி, பிரதமர் அலுவலகத்தில் (PMO) ஆராய்ச்சி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பு பிரிவில் சிறப்புப் பணி அதிகாரியாக உள்ளார். சிங்கப்பூர் மேலாண்மைப் பள்ளி பட்டதாரியான பிரதீக் தோஷி, பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, முதல்வர் அலுவலகத்தில் (CMO) ஆராய்ச்சி உதவியாளராகவும் பணியாற்றினார் என்று தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

இதன்பின் 2014ல் மோடி பிரதமராக பதவியேற்றதும், பிரதமர் அலுவலகத்தில் பணியாற்ற அழைக்கப்பட்டுள்ளார். சிறப்புப் பணி அதிகாரியாக பிரதமர் அலுவக பணியில் இணைந்த அவருக்கு, மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றதும், இணைச் செயலர் பதவிக்கு நிகரான அந்தஸ்து அவருக்கு ஒதுக்கப்பட்டது.

இப்படி, அரசியல் கட்சியில் மிகப் பெரிய பொறுப்பு வகிப்பவரும், அரசு அலுவலகத்தில் மிகப் பெரிய பொறுப்பு வகிப்பவர் வீட்டு திருமணம், அரசியல்நெடி இல்லாமல், குல வழக்கப்படி எளிமையாக நடைபெற்றது கவனம் ஈர்த்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x