Published : 07 Jun 2023 04:03 PM
Last Updated : 07 Jun 2023 04:03 PM

நெல், பருத்தி உள்ளிட்ட விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: நெல், பருத்தி உள்ளிட்ட விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் கூறியது: "பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடியதும், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதற்கான ஒப்புதலை அமைச்சரவை வழங்கியது.

விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அவ்வப்போது உயர்த்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான கரீப் பருவத்தைக் கருத்தில் கொண்டு விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

அதன்படி, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. நிலக்கடலை எண்ணெய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 9 சதவீதமும், எள் விதைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 10.3 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளன. நீளமான பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 10 சதவீதமும், நடுத்தர பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 8.9 சதவீதமும், பச்சைப் பயிறுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 10.4 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளன.

ஜவ்வரிசி, கேழ்வரகு, மக்காச்சோளம், உளுந்து, துவரம் பருப்பு, சூரியகாந்தி விதைகள், எண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 6 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 143 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.2,183 ஆக நிர்ணயிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் இல்லாத அளவு இம்முறை குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், நமது விவசாயிகள் பலன் பெறுவர்" என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x