Published : 06 Jun 2023 04:29 AM
Last Updated : 06 Jun 2023 04:29 AM

ஆண்டுதோறும் 4,500 கிமீ தொலைவிலான ரயில் தண்டவாள பழுதை முறையாக புதுப்பிக்க வேண்டும்: ரயில்வே தொழிற்சங்கம் வலியுறுத்தல்

சென்னை: நாடு முழுவதும் ஒரு லட்சத்து 16 ஆயிரம் கி.மீ. தொலைவிலான ரயில் பாதைகளில் சுமார் 12,000 பயணிகள் ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்களில் 2.30 கோடி பேர் பயணிக்கின்றனர். காலி பணியிடங்கள் நிரப்புவதில் தொய்வு, ரயில் பாதைகள் பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பதில் தீவிரம் காட்டாததால், ரயில் விபத்துகளுக்கு காரணமாக அமைவதாக தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: இந்திய ரயில்வேயில் 3.12 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. தண்டவாள பராமரிப்பு ஊழியர்கள் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் 4 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக குறைந்துள்ளது. இதுதவிர, ஓட்டுநர்கள் உட்பட பாதுகாப்பு பிரிவில் நிறைய காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும்.

ரயில் போக்குவரத்தில் ரயில் பாதை பராமரித்தல் என்பது முக்கியமான பணியாகும். ஆண்டுதோறும் 4,500 கி.மீ. தொலைவிலான ரயில் தண்டவாளங்களைப் புதுப்பிக்க வேண்டும். சிக்னல் பழுது அதிகரித்துள்ளது. தற்போதுள்ள நிலவரப்படி, 10,000 கி.மீ. தூரம் பழைய ரயில் பாதைகள் புதுப்பிக்கப்படாமல் இருக்கின்றன. பழைய பாதைகளை உடனடியாக புதுப்பிக்க வேண்டும். இதற்கு, மத்திய அரசு ரயில்வேக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றனர்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘‘ரயில் பாதைகள் புதுப்பித்தல் பணி என்பது உடனடியாக முடிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல் உள்ளன. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக ரயில் பாதைகள் அதிக அளவில் புதுப்பிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில்தான் ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்படுகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பெரும்பாலான ரயில் பாதைகளை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x