Published : 04 Oct 2017 08:12 AM
Last Updated : 04 Oct 2017 08:12 AM
எந்த ஒரு நாடும் தனது (அரசு) கொள்கையின் ஒரு கருவியாக தீவிரவாதத்தை பயன்படுத்துவதை சகித்துக் கொள்ள முடியாது என ஐ.நா.வில் இந்திய பிரதிநிதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில், ‘சர்வதேச தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள்’ தொடர்பான குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில் ஐ.நா.வுக்கான இந்திய தூதரகத்தின் சட்ட ஆலோசகரும் முதல் செயலாளருமான எட்லா உமாசங்கர் பேசியதாவது:
எந்த ஒரு நாடும் தனது கொள்கையின் ஒரு கருவியாக தீவிரவாதத்தை பயன்படுத்துவதை சகித்துக் கொள்ள முடியாது. அதேநேரம் தீவிரவாத அமைப்புகளின் உதவியை நாடிய நாடுகள் அதனாலேயே கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. கத்தி எடுத்தவன் கத்தியாலேயே மடிவான் என்ற பழமொழி இதற்கு பொருத்தமாகும்.
எனவே, தீவிரவாத குழுக்கள் மீது நடவடிக்கை எடுப்பது அல்லது அவற்றின் உள்கட்டமைப்பை அழிக்கும் விவகாரத்தில் சர்வதேச சமுதாயம் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். நல்ல தீவிரவாதம், கெட்ட தீவிரவாதம் என பாகுபாடு காட்டக் கூடாது. உலக நாடுகள் அனைத்தும் ஒன்றுகூடி தீவிரவாதத்தை வேரறுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT