Published : 04 Jun 2023 11:40 PM
Last Updated : 04 Jun 2023 11:40 PM

ஒடிசா | ரயில் விபத்து நடந்த பகுதியில் மீண்டும் ரயில் இயக்கம் தொடக்கம்: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

ரயில் போக்குவரத்து தொடக்கம்

பாலசோர்: ஒடிசாவில் கடந்த 2-ம் தேதி மாலை சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 2 பயணிகள் ரயில், ஒரு சரக்கு ரயில் மோதிய பயங்கர விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். 1,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில், விபத்து நடைபெற்ற இடத்தில் மீண்டும் ரயில் இயக்கம் தொடங்கியுள்ளது. இதை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்.

இந்த விபத்தில் சேதமடைந்த ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகளை 1000-க்கும் மேற்பட்டவர்கள் மேற்கொண்டனர். கிரேன் போன்ற இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. தொடர்ந்து ரயில் தடம் சீரமைப்பு மற்றும் மின்சார இணைப்பு போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், விபத்து ஏற்பட்ட பாஹானா பகுதியில் சுமார் 51 மணி நேரத்தில் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. தற்போது அங்கு இரண்டு பிரதான ரயில் தடங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.

முதல் ரயிலாக சரக்கு ரயில் ஒன்று அந்த தடத்தில் இயக்கப்பட்டுள்ளது. இதனை ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்.

“இரண்டு ரயில் தடங்களும் சீரமைக்கப்பட்டுள்ளன. 51 மணி நேரத்தில் ரயில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. இப்போது முதல் ரயில் போக்குவரத்து வழக்கம் போல தொடங்கும்” என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x