Published : 03 Jun 2023 06:54 PM
Last Updated : 03 Jun 2023 06:54 PM

ரயில் விபத்துக்கு காரணமானோர் கடுமையாக தண்டிக்கப்படுவர்: ஒடிசாவில் பிரதமர் மோடி உறுதி

பாலசோர்: ஒடிசா ரயில் விபத்துக்குக் காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஒடிசாவின் பாலசோர் நகருக்கு அருகே உள்ள பஹனஹா பஜார் ரயில் நிலையப் பகுதியில் நேற்று மாலை 7 மணி அளவில் இந்த ரயில் விபத்து நேரிட்டது. 3 ரயில்கள் மோதிக் கொண்ட கோர விபத்தில் இன்று (ஜூன் 3) நண்பகல் 2 மணி நிலவரப்படி 288 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 747 பேர் காயமடைந்திருப்பதாகவும், இவர்களில் 56 பேர் பலத்த காயமடைந்திருப்பதாகவும் இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

விபத்தை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்புப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து, டெல்லியில் இருந்து புறப்பட்டு ஒடிசா வந்த பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பஹனஹா பஜார் ரயில் நிலையப் பகுதிக்கு வந்தார். அப்போது அங்கு இருந்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பிரதமரை விபத்து நிகழ்ந்த பகுதிக்கு அழைத்துச் சென்றனர். விபத்துப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடியிடம், விபத்துக்கான காரணம் குறித்தும் பாதிப்பு குறித்தும், அடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர்கள் விளக்கினர்.

இதையடுத்து, பாலசோர் மாவட்ட மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர் மோடி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள், மருத்துவர்கள் பிரதமரிடம் விளக்கினர். பின்னர், அங்கிருந்தவாறு அமைச்சரவை செயலர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சரிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை வழங்க உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து டிடி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, "இது ஒரு துயரமான சம்பவம். காயமடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அரசு வழங்கும். ஒவ்வொரு கோணத்திலும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தவறிழைத்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்" என தெரிவித்தார்.

முதற்கட்ட தகவல்: இந்த விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் குழு முதற்கட்ட விசாரணை மேற்கொண்டது. அதில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு முதலில் சிக்னல் கொடுக்கப்பட்டதாகவும், அதன் பிறகு திரும்பப் பெறப்பட்டதாகவும் இதன் காரணமாகவே விபத்து நேரிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சிக்னல் கொடுக்கப்பட்டதை அடுத்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இணைப்பு தடத்தில் சென்று சரக்கு வாகனத்தின் மீது மோதி தடம் புரண்டுள்ளது. தடம் புரண்ட ரயிலின் பெட்டிகள் பிரதான ரயில் தடத்தின் மீது விழுந்துள்ளன. அந்தத் தடத்தில் வந்த யஷ்வந்த்பூர் - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில், பிரதான தடத்தின் மீது இருந்த ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது" என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x