Published : 18 Oct 2017 06:41 AM
Last Updated : 18 Oct 2017 06:41 AM

அயோத்தியில் அமைக்கப்பட உள்ள 100 மீட்டர் ராமர் சிலைக்கு பரிசாக 10 வெள்ளி அம்புகள்: ஷியா முஸ்லிம் வக்ப் வாரியம் வழங்குகிறது

அயோத்தியில் அமைக்கப்பட உள்ள 100 மீட்டர் உயரமுள்ள ராமர் சிலைக்கு மரியாதை செய்யும் வகையில் வெள்ளியால் செய்யப்பட்ட 10 அம்புகளை பரிசாக அளிக்க உள்ளதாக உத்தர பிரதேச ஷியா முஸ்லிம் மத்திய வக்ப் வாரியம் அறிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் சரயு நதிக்கரையில் 100 மீட்டர் உயரமுள்ள ராமர் சிலை அமைக்கப்படும் என்று மாநில அரசு கடந்த வாரம் அறிவித்தது. இதற்கு ஷியா முஸ்லிம் வாரியம் வரவேற்பும் ஆதரவும் தெரிவித்தது. சிலை அமைய உள்ள இடம் தங்களுக்குத்தான் (ஷியா முஸ்லிம் வக்ப் வாரியம்) சொந்தமானது என்றும் சன்னி முஸ்லிம் வக்ப் வாரியத்துக்கு சொந்தமல்ல என்றும் அறிவித்தது.முதல்வர் யோகி ஆதித்ய நாத்துக்கு உத்தர பிரதேச ஷியா முஸ்லிம் மத்திய வக்ப் வாரியத்தின் தலைவர் வசீம் ரிஸ்வி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அயோத்தியில் உள்ள கோயில்களுக்கு இந்த பகுதியை ஆண்ட நவாப்புகள் மதிப்பளித்துள்ளனர். மத்திய அயோத்தியில் உள்ள அனுமார் கோயிலுக்கு நிலத்தை 1739-ம் ஆண்டு நவாப் சுஜா-உத்தவுலா நன்கொடையாக அளித்துள்ளார். கோயில் கட்டுவதற்கான நிதியை நவாப் ஆசிப்-உத்-தவுலா வழங்கியுள்ளார்.

அயோத்தியில் 100 மீட்டர் உயரம் உள்ள ராமர் சிலை அமைப்பது பெருமை அளிக்கும் விஷயம். சரயு நதிக்கரையில் அமைய இருக்கும் ராமர் சிலைக்கு மரியாதை செய்யும் வகையில் 10 வெள்ளி அம்புகளை உத்தர பிரதேச ஷியா முஸ்லிம் வக்ப் வாரியம் பரிசாக அளிக்கும். இவ்வாறு கடிதத்தில் வசீம் ரிஸ்வி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x