Published : 02 Jun 2023 06:01 AM
Last Updated : 02 Jun 2023 06:01 AM

ஜனநாயகம், முகலாய ஆட்சி, குஜராத் கலவரம் உள்ளிட்ட பகுதிகள் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம்

புதுடெல்லி: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (என்சிஇஆர்டி), 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்களில் பல்வேறு புதிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கல்விக் கொள்கை, பாடத் திட்டங்கள் சார்ந்து ஆலோசனை வழங்குவதற்காகவும் கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் வகுப்பதற்காகவும் மத்திய அரசால் 1961-ம் ஆண்டு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு உருவாக்கப்பட்டது.

இக்குழு தற்போது 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்களில் பல்வேறு பகுதிகளை நீக்கியுள்ளது. ஜனநாயகம், முகலாய ஆட்சி, குஜராத் கலவரம், இந்திய ஏற்றத்தாழ்வு, வறுமை உள்ளிட்ட பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

6-ம் வகுப்பு பாடங்களிலிருந்து ஜனநாயகம், காலநிலை மாற்றம், கானுயிர் பாதுகாப்பு, உணவு உள்ளிட்டவை குறித்த பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. 7-ம் வகுப்பு பாடங்களிலிருந்து இந்திய ஏற்றத்தாழ்வு குறித்த பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஏன்ஏற்றத்தாழ்வு தீவிரமாக காணப்படுகிறது என்பது இந்தப் பகுதியில் விளக்கப்பட்டிருந்தது.

11-ம் வகுப்பு பாடங்களிலிருந்து ஏழ்மை, அமைதி உள்ளிட்ட பகுதிகளும், 12-ம் வகுப்பு பாடங்களிலிருந்து குஜராத் கலவரம், இந்தியா–பாகிஸ்தான் பிரிவினை, பனிப்போர், இனப்பெருக்கச் செயல்பாடு உள்ளிட்ட பகுதிகளும் நீக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் அரசியல்நோக்கத்துக்கு உட்பட்டு பாடத்திட்டங்கள் நீக்கப்படுவதாக கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் என துறைசார் வல்லுநர்கள் விமர்ச்சித்து வருகின்றனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி மாணவர்களின் கற்றல் செயல்பாடு பாதிக்கப்பட்டதால், பள்ளிப் பாடத்திட்டங்களை எளிமையாக்கும் நோக்கில் மாற்றங்கள் மேற்கொண்டு வருவதாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x