Published : 14 Apr 2023 06:06 AM
Last Updated : 14 Apr 2023 06:06 AM

மேற்குத் தொடர்ச்சி மலையில் பரவும் காட்டுத் தீயால் 60 ஹெக்டேர் வனப்பரப்பு சேதம்: தீயை அணைக்க 3-வது நாளாக போராட்டம்

கோவை நாதேகவுண்டன்புதூரில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அணையாமல் நேற்று தொடர்ந்து எரிந்த காட்டுத் தீ.

கோவை: மேற்கு தொடர்ச்சி மலையில் பரவிய காட்டுத் தீயால் 60 ஹெக்டேர் வனப் பரப்பு எரிந்து சேதமானது. கோவை ஆலாந்துறை ஊராட்சிக் குட்பட்ட நாதேகவுண்டன்புதூரில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 11-ம் தேதி மாலை காட்டுத் தீ ஏற்பட்டது. தகவல் அறிந்த மதுக்கரை, போளுவாம்பட்டி, கோவை வனச்சரக பணியாளர்கள் தீ பரவாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் மூன்றாவது நாளாக நேற்றும் தொடர்ந்து தீ பரவியது.

காட்டுத் தீ ஏற்பட்ட பகுதியை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, “வெயில் அதிகம் இருந்ததால் தீ அணையாமல் தொடர்ந்து பரவி வருகிறது. இதுவரை சுமார் 60 ஹெக்டேர் வனப்பரப்பு சேதமாகியுள்ளது. மொத்தம் 7 குழுக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் இருந்தும் 15 வனப் பணியாளர்கள் வந்துள்ளனர். உள்ளூர் மக்களும் உதவிக்காக இணைந்துள்ளனர். மலைப் பாறைகளில் இருந்து மரங்கள் உள்ள கீழ்பகுதியை நோக்கி தீ பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர் பகுதிகளில் இருந்து வந்த 2 தீயணைப்பு வாகனங்கள் தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன”என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x