Published : 21 Feb 2023 07:26 PM
Last Updated : 21 Feb 2023 07:26 PM

நடனமாடும் கழுகுகள் | நேட்-ஜியோ புகைப்பட போட்டியில் பரிசு வென்ற இந்திய வம்சாவளி பொறியாளர்

பிக்சர் ஆஃப் த இயர் விருது வென்ற கழுகுகளின் நடனம் புகைப்படம்

ஆற்றின் ஓரம் பரவியிருக்கும் இருக்கும் சூழலின் ஈரம்தான் அந்தப் புகைப்படம் முழுவது நிறைந்திருக்கிறது. இலைகள் உதிர்த்த ஒரு மரக்கிளை ஒன்றில் மீன் வேட்டைக்காக சில வழுக்கைத்தலை கழுகுகள் உட்கார்ந்திருக்கின்றன. அப்போது, அந்தக் கிளையில் தனக்கும் கொஞ்சம் இடம் வேண்டி இறகுகள் சிலிர்த்தபடி வருகிறது மற்றொரு வழுக்கைத்தலை கழுகு. வசதியை விட்டுத் தர விரும்பம் இல்லாத ஏற்கெனவே கிளைகளில் இருக்கும் கழுகுகளில் ஒன்று காற்றில் எம்பி, சிறகு விரித்து "கிட்ட வந்தா தெரியும் சேதி" தனது எதிர்பைக் காட்டுகிறது. அதற்கு இசைவு தெரிவிக்கும் விதமாக, கிளைகளிலிருக்கும் மற்ற கழுகுகளும் தங்களின் மண்டை மயிர் சிலிர்த்து "உன் வருகை எங்களுக்கு பிடிக்கவில்லை" என்று குறிப்புணர்த்துகின்றன.

அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி பொறியாளரான கார்த்திக் சுப்பிரமணியத்தால் அலாகாஸ் காடுகளில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம், ‘நேஷனல் ஜியோகிராஃபிக் பிக்சர் ஆஃப் த இயர்’ பரிசை பெற்றுள்ளது.

புகைப்படம் பற்றிய புகைப்படக்காரரின் குறிப்புகள் மட்டும் இல்லையென்றால், களிப்பில் இரண்டு கழுகுகள் காற்றில் நடனமாட, அதை வேறு இரண்டு கழுகுகள் அமர்ந்து வேடிக்கை பார்ப்பதாகவே நமக்குத் தோன்றும். அதனால்தான் தனது புகைப்படத்திற்கு ‘கழுகுகளின் நடனம்’ என பொருள்படும் படி, "டான்ஸ் ஆஃப் தி ஈகிள்" என்று பெயரிட்டுள்ளார் கார்த்திக்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி பொறியாளரான கார்த்திக் தொழில்முறை புகைப்படக் கலைஞர் கிடையாது. பொழுதுபோக்கிற்காக புகைப்படம் எடுக்கும் இவர் 2020-ம் ஆண்டு கரோனா ஊரடங்குக்கு பின்னர்தான் பரீட்சார்த்தமான முறையில் காட்டுயிர் புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கியிருக்கிறார். அதற்கு முன்பு வரைதான் பயணம் செய்யும் பகுதிகளின் நிலப்பரப்புகளை புகைப்படங்களாக்கியிருக்கிறார்.

கழுகுகளின் நடனம் குறித்த அனுபவம் பற்றி கார்த்திக் கூறும்போது, "ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதங்களில் அலாஸ்காவிலுள்ள சில்காட் பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு நூற்றுக்கணக்கான வழுக்கைத்தலை கழுகுகள், சால்மன் மீன்களை உண்ண வருவதுண்டு. அவற்றைப் படம் பிடிப்பதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் அங்கே போய்கொண்டிருக்கிறேன். விருது பெற்ற புகைப்படம் 2022-ம் ஆண்டு சென்ற ஒரு வாரப் பயணத்தின் கடைசி நாளில் எடுக்கப்பட்டது.

கழுகுகளுக்கும் சுற்றித் திரிவதற்கு சில விருப்பமான இடங்கள் இருக்கிறது என்று நான் நினைத்தேன். ஏற்கெனவே சிலரால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்கு வேறொருவர் செல்ல விரும்பும்போது அங்கு ஒரு சலசலப்பு ஏற்படுகிறது. அப்படி ஒரு சலசலப்பின் போதுதான் நான் இந்தப் புகைப்படத்தை எடுத்தேன்" என்றார்.

மேலும், கார்த்திக் கூறுகையில் "மணிக்கணக்காக கழுகளுடைய நடத்தைகளையும் வடிவங்களையும் கூர்ந்த கவனித்ததால் என்னால் இத்தகைய படத்தினை எடுக்க முடிந்தது. ஜார்ஜ் ஆர்.ஆர் மார்டினின் நாவலான ‘எ டான்ஸ்வித் டிராகன்ஸ்’-இல் வரும் கற்பனையான டிராகன் போருக்கு மரியாதை செய்யும் விதமாக, இந்தப் படத்திற்கு நான் ‘டான்ஸ் ஆஃப் தி ஈகிள்ஸ்’ என்று வைத்தேன்" என்றார்.

கார்த்திக்கின் காத்திருப்புக்கும் அவதானிப்புக்கும், நேஷனல் ஜியோகிராஃபி அங்கீகரம் அளித்துள்ளது. சுமார் 5,000-க்கும் அதிமான புகைப்படங்களில் இருந்து இந்த ஆண்டுக்கான சிறந்த படமாக, தொழில்முறை புகைப்படக்காரராக இல்லாத கார்த்திக் சுப்பிரமணியத்தின் புகைப்படத்தை தேர்வு செய்துள்ளது. தனது உழைப்பிற்கான கூடுதல் அங்கீகாரமாக நேஷனல் ஜியோகிராஃபி டிஜிட்டல் இதழுக்கான 6 மாத சந்தாவை இலவசமாக பெற்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x