தமிழகத்தில் கழுகுகளின் எண்ணிக்கை, இனம், வாழ்விட புள்ளிவிவரம் சேகரிப்பு: உயர் நீதிமன்றத்தில் வனத்துறை தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் உள்ள கழுகுகளின் எண்ணிக்கை, அவற்றின் இனம், வாழ்விடம் குறித்து தமிழக வனத்துறை புள்ளி விவரங்களை சேகரித்துள்ளதாக வனத்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கழுகுகள் இனம் அழிந்து வருவதை தடுக்கவும், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கழுகுகள் வாழ்விட மேம்பாடு மையங்களை உருவாக்கக்கோரியும் வண்டலூரைச் சேர்நத் சூர்யகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக வனத்துறை தலைமை வன பாதுகாப்பாளர் சீனிவாச ராமச்சந்திரன் சார்பில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் மற்றும் வனத்துறை சிறப்பு அரசு வழக்கறிஞர் டி.சீனிவாசன் ஆகியோர் ஆஜராகி தாக்கல் செய்த அறிக்கையில், கோவை மாவட்டம் சிறுமலை பெத்திகுட்டை என்ற இடத்தில் விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு காயமடைந்த விலங்குகள், பறவைகள், ஊர்வன போன்ற வன விலங்குகளுக்கு அறுவை சிகிச்சை, நோய் கண்டறிதல் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படும். இங்கு கழுகுகளை பாதுகாக்கவும், உரிய சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனவிலங்குகளுக்கு இந்த மையம் பேருதவியாக இருக்கும். கடந்த 2020 முதல் தற்போது வரை விஷம் ஏறி பாதிக்கப்பட்ட 4 கழுகுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிகளில் இறந்து போன விலங்குகளை உண்ணும் கழுகுகள் இயற்கையாகவே வனத்தை தூய்மைப்படுத்துகின்றன. தமிழகத்தில் உள்ள கழுகுகளின் எண்ணிக்கை, அவற்றின் இனம், வாழ்விடம் குறித்து தமிழக வனத்துறை புள்ளி விவரங்களை சேகரித்துள்ளது. இந்த கணக்கெடுப்பில் தமிழக மற்றும் கேரள வனத்துறை ஆராய்ச்சி மையங்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

கடந்த 2023-ல் மாநில அளவிலான பறவைகள் ஆணையம் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் மற்றும் குழுக்கள் நடத்தியுள்ள கூட்டங்களில் கழுகுகள் மட்டுமின்றி பிற பறவையினங்களின் பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. கழுகுகளின் இனத்தை பாதுகாப்பது குறித்து மருத்துக்கடை உரிமையாளர்களிடமும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை மருந்து கட்டுப்பாடு ஆணையம் சார்பில் 146 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அழிந்து வரும் கழுகுகள் இனத்தைப் பாதுகாக்க மாநில அளவிலான ஆய்வுக்குழுவில் வன நிபுணர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர், என தெரிவிக்கப்பட்டிருந்தது.

வனத்துறையின் இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in