

கூடலூர்: பென்னை காப்புக்காட்டில் பெண் புலி உயிரிழந்தது. நெஞ்சில் காயம் மற்றும் ரத்த கசிவால் புலி உயிரிழந்தது என வனத்துறையினர் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டம் நெலாக்கோட்டை வனச்சரகம், பென்னை காப்புக்காடு பகுதியில் வனப்பணியாளர்கள் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியில் புலி ஒன்று இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது.இது குறித்து நெலாக்கோட்டை வனச்சரகர் கணேஷூக்கு வன ஊழியர்கள் தகவல் அளித்தனர். முதுமலை புலிகள் காப்பகம், துணை இயக்குநர் அருண் தலைமையில், தொண்டு நிறுவன அலுவலர்கள், மக்கள் பிரதிநிதி மற்றும் வனப்பணியாளர்கள் முன்னிலையில் முதுமலை புலிகள் காப்பாக வனக்கால்நடை உதவி மருத்துவர் ராஜேஷ்குமார் இறந்த புலியின் பிரேதத்துக்கு உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது.
வன்ததுறையினர் கூறும்போது, ‘பிரேத பரிசோதனையில் இறந்தது சுமார் ஐந்து வயதுடைய பெண் புலி. இறந்த புலியின் நெஞ்சு பகுதியில் காயமும், உட்புரத்தில் ரத்த கசிவுகளும் காணப்பட்டது. புலியின் உடல் மெலிந்தும், சில நாட்களாக உணவு ஏதும் உட்கொள்ளமல் இருந்ததும், புலியின் இறைப்பையில் குடல் புழுக்களும் மிகுந்து காணப்பட்டது. தடவியல் ஆய்விற்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மற்ற உடற் பாகங்கள் அனைத்தும் சம்பவ இடத்திலேயே எரியூட்டப்பட்டது’ என்றனர்.