Last Updated : 23 May, 2024 09:22 AM

 

Published : 23 May 2024 09:22 AM
Last Updated : 23 May 2024 09:22 AM

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!

பொள்ளாச்சி வனச்சரகம் வில்லோனி வனப்பகுதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர்

பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணி இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. யானைகளை நேரில் கண்டறிதல், நீர் நிலைகளை கண்காணித்தல் உள்ளிட்ட முறைகளில் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.

தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய அளவிலான யானைகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது. தமிழகத்தில் ஆனைமலை உள்ளிட்ட புலிகள் காப்பகங்களில், ஆண்டுதோறும் பருவமழைக்கு முன்பும் மற்றும் அதன் பின்னரும் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அத்துடன் ஆண்டுக்கு ஒரு முறை நவீன தானியங்கி கேமராக்கள் பயன்படுத்தி துல்லியமான புலிகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது ஆண்டுக்கு ஒருமுறை, தென்னிந்திய அளவிலான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பும் நடந்து வருகிறது.

இந்தாண்டு தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் வனப்பகுதிகளில், ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணிகள் மே 23-மி தேதி தொடங்கி 3 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பு பணிகள், நேர்கோடு முறையில், நீர்நிலைகள் கண்காணிப்பு மற்றும் கால் தடம், எச்சம் ஆகிய முறைகளில் நடக்கிறது. இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அட்டக்கட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் நேற்று
பயிற்சி முகாம் நடந்தது. அதில், வன ஊழியர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து இன்று வனப்பகுதிக்குள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி மற்றும் உலாந்தி வனச்சரகத்தில் உள்ள வனப்பகுதியில் 32 நேர்கோட்டு பாதையில், வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் யானைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

3 நாட்கள் நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணியில் யானைகளை நேரில் பார்த்தல், நீர்நிலைகள், யானை சாணம் ஆகியவற்றை கொண்டு கணக்கெடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இன்று பொள்ளாச்சி வனச்சரகம் வில்லோனி வனப்பகுதியில் பணத்துறையினர் யானைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: யானைகள் கணக்கெடுப்பு 3 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் நாள் (மே 23-ம் தேதி), தொகுதி மாதிரி எடுக்கப்படும். 5 பணியாளர்கள் கொண்ட குழுக்கள் குறைந்தபட்சம் 15 கி.மீ தூரம் வனப்பகுதிக்குள், நடைபயணமாக ரோந்து சென்று, யானைகளின் எண்ணிக்கை, பாலினம் (ஆண்கள், பெண்கள், மக்னா யானைகள்), வயது பிரிவுகள் (வயது வந்த யானை, சிறார் யானை, கன்று) மற்றும் பிற தொடர்புடைய தகவல்கள் உட்பட, நேரடியாக கண்காணித்து யானைகளின் தரவுகளைப் பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்படும்.

இரண்டாவது நாளான மே 24-ம் தேதி, லைன் டிரான்செக்ட் நடவடிக்கை நடைபெறும். காலை 6 மணிக்கு 2 கி.மீ, போக்குவரத்து தொடங்கும். இந்த நடைபயணத்தின் போது இருபுறமும் யானைகளின் சாணம் மற்றும் கால் தடங்கள் பதிவாகும். கடைசி நாளான மே 25-ம் தேதி குட்டைகள் உள்ளிட நீர்நிலைகளின் எண்ணிக்கை நடைபெறும்.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட நீர்நிலைகளை வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து, இந்த நீர் ஆதாரங்களுக்கு வரும் யானைகளை பதிவு செய்து புகைப்படம் எடுப்பார்கள். இவ்வாறு தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x