Last Updated : 23 Apr, 2024 04:02 AM

 

Published : 23 Apr 2024 04:02 AM
Last Updated : 23 Apr 2024 04:02 AM

வன விலங்குகளின் தாகம் தீர்க்க ‘மக்கள் பங்களிப்பு’ திட்டம் அறிமுகம் @ ஓசூர்

ஓசூர் வனக்கோட்டத்தில் வன விலங்குகளின் தாகம் தீர்க்க, ‘மக்கள் பங்களிப்பு’ திட்டம் தொடர்பாக வனத்துறை வெளியிட்டுள்ள காணொலி அறிவிப்பு.

ஓசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில் வன விலங்குகளின் தாகத்தைத் தணிக்க, ‘பொதுமக்கள் பங்களிப்பு’ திட்டத்தை வனத்துறை அறிமுகம் செய்து, செயல்படுத்தி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் வடக்கு மற்றும் மேற்கு காவிரி வன உயிரின சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி சூழலியல் பாதுகாப்பு மற்றும் தாவர இனங்கள், விலங்குகளின் வாழ்விட பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். மேலும், இப்பகுதி தென்னிந்தியாவில் யானைகளின் முக்கிய வாழ்விடமாகவும், காவிரி ஆற்றுப் படுகை வன உயிரினங்களின் முக்கிய வாழ்விடமாகவும் உள்ளது.

இப்பகுதியில் போதிய அளவில் பருவமழை கைகொடுக்காததால், நிகழாண்டு எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவி வருகிறது. மேலும், சரணாலய வனப்பகுதி வழியாகச் செல்லும் காவிரி நீரின்றி வறண்டுள்ளது. இதனால், இப்பகுதியில் உள்ள வன உயிரினங்கள் தண்ணீரின்றி பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, வன விலங்குகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய ஓசூர் வனக்கோட்டத்தில் வனத் துறை சார்பில் 70 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப் பட்டுள்ளன. இத்தொட்டிகளில் டிராக்டர் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி நிரப்பி வருகின்றனர்.

மேலும், பொதுமக்கள் பங்களிப்புடன் தண்ணீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பிறந்த நாள் கொண்டாடுவோர் மற்றும் குடும்ப விழா நடத்துவோர், வன உயிரினங்களுக்குத் தண்ணீர் வழங்கி உதவிட வேண்டும் என வன உயிரின பாதுகாவலர் கார்த்திகேயனி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன்படி, ரூ.1,500 செலுத்தி ஒரு டிராக்டர் தண்ணீரை ( 5 ஆயிரம் லிட்டர் ) வன உயிரினங்கள் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வனத் துறையினர் கூறியதாவது: வன விலங்குகளின் தாகம் தீர்க்க பொது மக்களின் பங்களிப்பு திட்டத்தை அறிமுகம் செய்த இரு நாட்களில் 15 பேர் தண்ணீர் வழங்கியுள்ளனர். தண்ணீர் வழங்க விரும்புவோர் க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்தும், 63842 07899 என்ற எண்ணுக்கு போன் பே மூலமும் பணம் அனுப்பலாம்.மேலும், விரிவான தகவல் அறிய 1800 425 5135 என்ற கட்டணமில்லா தொலைபேசி மற்றும் 90478 32156 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x