Published : 21 Dec 2023 04:02 AM
Last Updated : 21 Dec 2023 04:02 AM

கொடைக்கானலாக மாறிய திண்டுக்கல் நகரம் - காலை முதல் மாலை வரை குளு குளு சீசன்

திண்டுக்கல்லில் நத்தம் சாலையில் பகலில் காணப்பட்ட பனி மூட்டத்துக்கிடையே செல்லும் வாகன்ங்கள். படம்: நா.தங்கரத்தினம்

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நாள் முழுவதும் மேகமூட்டமாக இருந்ததால் நேற்று முழுவதும் சூரியன் தென்படாத நிலை காணப்பட்டது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை, வெள்ளம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், திண்டுக்கல் மாவட் டத்தில் அதன் தாக்கமாக சில தினங்கள் சாரல் மழை மட்டும் பெய்தது. இதையடுத்து நேற்று காலை முதலே மேக மூட்டம் காணப்பட்டது. அதிகாலை முதல் பனி அதிகரித்து காணப்பட்ட நிலையில், தொடர்ந்து காலை, பகல், மாலை என நாள் முழுவதும் மேக மூட்டமாகக் காணப்பட்டது.

நேற்று முழுவதும் திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் சூரியன் தென்படவில்லை. இதனால் கொடைக்கானலில் உள்ள கால நிலையைப் போல் திண்டுக்கல் நகரம் காணப்பட்டது. அருகிலுள்ள சிறுமலை தெரியாத அளவுக்கு மேகக் கூட்டம் முழுமையாக சிறுமலையை மறைத் திருந்தது.

நேற்று திண்டுக்கல் நகரில் பகலில் 26 டிகிரி செல்சியசும், மாலையில் 23 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் காணப்பட்டது. காற்றின் ஈரப்பதம் 76 சதவீதம் காணப்பட்டதால் இரவில் லேசான குளிர் நிலவியது. இதனால் திண்டுக்கல் மற்றும் இதன் சுற்றுப்புற பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வீடுகளில் மக்கள் மின் விசிறியை முற்றிலும் பயன்படுத்தவில்லை. சாலையில் வாகன ஓட்டுநர்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x