Published : 21 Nov 2023 05:29 AM
Last Updated : 21 Nov 2023 05:29 AM

உயிரி எரிபொருளை தயாரிக்க பயோ எரிபொருள் வாரியம்: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த திட்டம்

சென்னை: உயிரி எரிபொருள் தயாரிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள பயோ எரிபொருள் வாரியத்தின் ஒருங்கிணைப்பு பணிகளை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மேற்கொள்ளும். இதன் மூலம், விவசாயிகளின் வருமானம் உயர்த்துதல், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

நாட்டின் மொத்த இறக்குமதியில் கச்சா எண்ணெய்யின் பங்கு 70 சதவீதமாக உள்ளது. இதனால், இறக்குமதி செலவினத்தைக் கட்டுப்படுத்த பெட்ரோல், டீசலுக்கு மாற்றான எரிபொருளை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. எனவே, காய்கறிகள், திடக் கழிவுகள், பசுவின் சாணம் ஆகியவற்றை பயன்படுத்தி உயிரி எரிபொருள் தயாரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, எரிசக்தி, வேளாண், ஊரக வளர்ச்சி, மாசுக் கட்டுப்பாடு உள்ளிட்ட 17 துறைகளை இணைத்து பயோ ஃபியூயல் வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாரியத்தின் ஒருங்கிணைப்பு பணிகளை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (டெடா) மேற்கொள்ளும். இந்த அலுவலகத்தில் இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மேலாண்மை இயக்குநர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் ஆனந்தராஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் உயிரி எரிபொருளுக்கு தேவைப்படும் பொருட்களை சார்ந்துள்ள விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்திருப்பது, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம், உயிரி எரிபொருளை தயாரித்து எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப் பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x