Published : 16 Sep 2023 04:04 PM
Last Updated : 16 Sep 2023 04:04 PM

சிவிங்கிப் புலி திட்டம் | ‘2-வது ஆண்டில் இனப்பெருக்கம், விலங்கு தேர்வில் கவனம் செலுத்த முடிவு’

கோப்புப்படம்

புதுடெல்லி: சிவிங்கிப் புலி திட்டதின் இரண்டாவது ஆண்டில் இனப்பெருக்கம் மற்றும் விலங்குகளின் தேர்வுகளில் கவனம் செலுத்தப்படும் என்று இத்திட்டத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வனத்துறை கூடுதல் இயக்குநர் எஸ்.பி.யாதவ் அளித்த பேட்டி ஒன்றில், “சீட்டா திட்டத்தின் இரண்டாவது ஆண்டில் இந்த விலங்குகள் இனப்பெருக்கம் செய்வதில் கவனம் செலுத்தப்படும். சிறுத்தைகளின் மரணங்களுக்கு அவற்றுக்கு அணிவிக்கப்பட்ட ரேடியோ காலர்கள் காரணம் இல்லை. என்றாலும் அதே ஆப்பிரிக்க தயாரிப்பாளர்களிடமிருந்து புதிய ரேடியோ காலர்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து அடுத்த தொகுதி சிவிங்கிப் புலிகள் இறக்குமதி செய்யப்பட இருக்கின்றன. அவை மத்தியப் பிரதேசத்தின் காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயத்தில் விடப்பட இருக்கிறது. அது இந்த ஆண்டு இறுதியில் நடக்கும்.

குனோ வனபபூங்காவில் 20 சிவிங்கிப் புலிகள் வரை விடலாம் என்று சீட்டா திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அங்கே குட்டி உட்பட 15 சிவிங்கிப் புலிகள் உள்ளன. நாங்கள் அடுத்தத் தொகுதி சிவிங்கிப் புலிகளை இந்தியாவுக்கு கொண்டுவரும்போது அவை வேறு இடங்களில் விடப்படும். அவை மத்தியப் பிரதேச மாநிலம் காந்தி சாகர் சரணாலயம் மற்றும் நவுராஹியில் விடப்படும். இதற்காக காந்தி சாகர் சரணாலயத்தில் தளங்களை தயார்ப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் நவம்பர் மற்றும் டிசம்பரில் முடிவடையும் என்று நினைக்கிறேன். பணிகள் நிறைவடைந்த அறிக்கை கிடைத்தவுடன், நாங்கள் அங்குச் சென்று ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்வோம். டிசம்பருக்கு பின்னர் சிவிங்கிப் புலிகளை கொண்டுவரும் பணிகளை மேற்கொள்வோம்.

சவாலான குளிர்கால பூச்சு (வின்டர் கோட்): சிவிங்கிப் புலி திட்டத்தின் முதலாமாண்டில் சந்தித்த மிகப் பெரிய சவால்களில் ஒன்று குளிர்கால பூச்சு என்ற ‘வின்டர் கோட்’. ஆப்பிரிக்க குளிர்காலத்தை (ஜூன் முதல் செப்டம்பர் வரை) எதிர்பார்த்து சில சிவிங்கிப் புலிகள், இந்தியாவின் கோடை மற்றும் மழைக் காலங்களில் இந்தக் குளிர்கால பூச்சினை உருவாக்கின. இந்தக் குளிர்கால கோட் ஈரப்பதம் மற்றும் வெப்பத்துடன் இணைந்து விலங்குகளுக்கு அரிப்பினை உருவக்குகின்றன. இதனால் விலங்குகள் தங்களின் கழுத்தை மரத்தின் தண்டுகள் மற்றும் தரைகளில் தேய்த்துக்கொள்கின்றன. இதனால் அவற்றுக்கு தொற்று உண்டாகுகிறது. இதனால் தோலில் காயங்கள் ஏற்படுகின்றது. அதில் ஈக்கள் முட்டையிடுகின்றன. இதனால் புழுத் தொல்லைகளை உண்டாகி, பாக்டீரியா தொற்று ஏற்பட்டு விலங்குகளின் மரணத்துக்கு வழிவகுக்கிறது.

சில சிறுத்தைகள் இந்த குளிர் பாதுக்காப்பினை உருவாக்கவில்லை. அதனால் தொற்று பாதிப்பு இல்லாமல் இருந்தன. இவை இந்திய தட்பவெப்ப நிலைக்கு பொருத்தமானவை. அதனால் நாங்கள் அடுத்த சிவிங்கிப் புலிகள் இறக்குமதியின்போது விலங்குகள் தேர்வில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறோம். நாங்கள் இந்த குளிர்கால பூச்சினை உருவாக்காத அல்லது மெல்லிய ஒன்றினை உருவாக்கும் விலங்குகளை தேர்வு செய்ய இருக்கிறோம்.

வேட்டையாடும் பண்பு: இந்த முதலாமாண்டில் குறிப்பிடத்தகுந்த சாதனைகளில் ஒன்று, சிவிங்கிப் புலிகள் தங்களின் இயற்கையான வேட்டைப் பண்பினை வெளிப்படுத்தியது தான். அவை சிறந்த வேட்டையாடும் தன்மையினை வெளிப்படுத்தின. அதன் இயற்கையான திறமையினை பாதுகாத்தன. இந்தச் சூழலுக்கு மாறிக்கொண்டன. அந்த அறிகுறிகள் எல்லாம் மிகவும் ஊக்கமளிக்கக் கூடியவை. சிவிங்கிப் புலி திட்டத்தின் முதலாவது ஆண்டில் நாம் பல மைல்கல்களை எட்டியுள்ளோம் என நான் கருதுகிறேன்.

இரண்டாவது ஆண்டில் கவனம் செலுத்தும் விஷயம் என்றதும் முதலில் எனது எண்ணத்தில் வருவது சிவிங்கிப் புலிகளின் இனப்பெருக்கம். நாம் அதிக குட்டிகளை பெறமுடியுமானால் இந்திய மண்ணில் பிறக்கும் குட்டிகள் இந்தியச் சூழலுக்கு தங்களை சிறப்பாக மாற்றிக்கொள்ளும். ஒருமுறை இனப்பொருக்கம் நிகழ்ந்துவிட்டால் அதன் பின்னர் நமது மண்ணில் மக்கள் தொகை எவ்வாறு செயல்படும் என்று நமக்கு தெரியும். அதனால், அடுத்த ஆண்டு நமது மண்ணில் அதிக குட்டிகள் இருப்பது முக்கியம்" என்று எஸ்.பி.யாதவ் தெரிவித்தார்.

மறு அறிமுகம்: கடந்த ஆண்டு செப்.17-ம் தேதி தனது பிறந்த நாளின்போது ஆப்பிரிக்க நாடான நமீபியாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட 8 சிவிங்கிப் புலிகளை மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் கடந்த 1952-ம் ஆண்டு முதல் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிவிங்கிப் புலிகளை மறுஅறிமுகம் செய்யும் வகையில் சிவிங்கிப் புலி திட்டத்தின் மூலம் நமீயா மற்றும் தென்னாப்பிரிக்காவில் இருந்து 20 சிவிங்கிப்புலிகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன. அவை முதலில் கடந்த ஆண்டு செப்டம்பரிலும், பின்னர் இந்த ஆண்டு பிப்ரவரியிலும் என இரண்டு கட்டங்களாக இந்தியா கொண்டுவரப்பட்டன. இதில் மார்ச் மாதம் முதல் பல்வேறு காரணங்களால் ஆறு சிறுத்தைகள் உயிரிழந்துவிட்டன. மே மாதத்தில் நமீபிய பெண் சிறுத்தைக்கு பிறந்த நான்கு குட்டிகளில் அதிக வெப்பம் காரணமாக மூன்று குட்டிகள் உயிரிழந்தன. மீதமுள்ள ஒரு குட்டி மனித பாதுகாப்பில் வளர்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x