Published : 22 Jul 2023 06:08 AM
Last Updated : 22 Jul 2023 06:08 AM

ஆனைமலை ஒன்றியம் சரளப்பதி பகுதியில் சுற்றித் திரியும் மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு

மக்னா யானையின் நடமாட்டத்தை ஆய்வு செய்ய சரளப்பதி பகுதிக்கு வந்த ஆனை மலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராமசுப்பிரமணியத்திடம் முறையிட்ட பொதுமக்கள்.

பொள்ளாச்சி: சரளப்பதி பகுதியில் சுற்றித்திரியும் மக்னா யானையை பிடிக்கும்நடைமுறை தொடங்கப்பட்டுள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒன்றியத்துக்குட்பட்ட சரளப்பதி கிராமத்திலுள்ள விளைநிலங்களுக்குள், கடந்த நான்கு மாதங்களாக இரவு நேரத்தில் மக்னா யானை புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதையடுத்து, வனத்துறையினர் தனிக்குழு அமைத்தும், கும்கி யானைகளை நிறுத்தியும் மக்னா யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும்முயற்சியில் ஈடுபட்டனர்.

வனத்துறை ஊழியர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள் அடங்கியகுழுவினர், மக்னா யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்துவந்தனர். ஆனால், வனப்பகுதியில் இருந்து வெளியேறி விளைநிலங்களுக்குள் நுழைவதைதடுக்க முடியவில்லை. இதையடுத்து, சரளப்பதி பொதுமக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தின் மாவட்டவன அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வனத்துறையினர், பிரச்சினையின் தீவிரத்தை மேல் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் யானையை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து கொண்டுவரப்பட்ட சின்னதம்பி, ராஜவர்த்தன், கபில்தேவ் ஆகிய 3 கும்கி யானைகள் துணையுடன், கடந்த சில நாட்களாக மக்னா யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் ராமசுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலர் பார்கவ் தேஜா, உதவி வனப்பாதுகாவலர் செல்வம், சேத்துமடை கிராம நிர்வாக அலுவலர் முருகன் உள்ளிட்டோர் சரளப்பதி கிராமத்தில் மக்னா யானையின்நடமாட்டம் குறித்து நேற்று ஆய்வுநடத்தினர். அப்போது அங்கு வந்தபொதுமக்கள், வனத்துறை உயர்அதிகாரிகளை முற்றுகையிட்டு மக்னா யானையை விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, "விவசாயிகளின் பயிருக்கும், பொதுமக்களின் உயிருக்கும் அச்சுறுத்தலாக உள்ள மக்னா யானையால், சரளப்பதி மக்கள்கடந்த 4 மாதங்களாக நிம்மதி இழந்து தவிக்கிறோம். வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும் யானையின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும் முடியவில்லை. எனவே, மக்னா யானையை பிடித்து முகாம் யானையாக மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தோம்.

இதையடுத்து, கள ஆய்வுக்குவந்த வனத்துறை உயர் அதிகாரிகளிடமும் முறையிட்டுள்ளோம். இன்னும் இரண்டு நாட்களில் மக்னா யானையை பிடிக்க திட்டமிட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்" என்றனர்.

வனத்துறையினர் கூறும்போது, "மக்னா யானையை பிடிக்க தற்போதுஅனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து, அதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் என்பதால், யானையின் உடல்நிலை குறித்து வன கால்நடை மருத்துவர்கள் ஆய்வுசெய்து அறிக்கை அளிப்பார்கள். அதன் பின்னர் யானையை பிடிப்பதற்கான பணிகள் தொடங்கும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x