Published : 16 Jun 2023 05:17 PM
Last Updated : 16 Jun 2023 05:17 PM

தூத்துக்குடியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் பாழாகும் மீன்பிடித் துறைமுகம்

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி: தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவு களால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள், இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மீன்பிடித் துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 265 விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

இங்கிருந்து அதிகாலையில் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுவிட்டு, இரவில் கரை திரும்பும். மீன்பிடித் தொழில் இல்லாத நேரத்தில் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய மீன் இறங்கு தளமாக தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் விளங்குகிறது.

இங்கு மீன்களை வாங்குவதற்காக தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள். இந்த மீன்பிடித் துறைமுகத்தை நம்பி நேரடியாக சுமார் 5,000 மீனவர்கள் தொழில் செய்து வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் மறைமுகமாக பயனடைந்து வருகின்றனர். இந்த மீன்பிடித் துறைமுகம் கடந்த ஆண்டு ரூ.5 கோடி மதிப்பீட்டில் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டது.

ஜெல்லி மீன்களுக்கு ஆபத்து: இந்நிலையில் மீன்பிடித் துறைமுகத்தில் குப்பை கூழங்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், படகுகளின் கழிவு பொருட்கள் குவியல் குவியலாக சேர்ந்துள்ளன. இவை கடல்நீரில் மிதக்கின்றன. இதனால் கடல்நீரின் தன்மையே மாறி துர்நாற்றும் வீசுகிறது. இந்த கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த பகுதியில் அண்மை காலமாக அதிகம் வந்துள்ள ஜெல்லி மீன்களுக்கு பிளாஸ்டிக் கழிவுகளால் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

மேலும், மீன்பிடித் துறைமுகத்துக்குள் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் காற்றில் பறந்து கடல் பகுதிக்கும் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படலாம். எனவே, இந்த கழிவுகளை உடனடியாக அகற்றவும், மீன்பிடித் துறைமுக கடல் பகுதியை சுத்தமாக பராமரிக்கவும் மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்களும், மீனவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘மீன்பிடித் துறைமுகப் பகுதியில் சேரும் கழிவுகள் அவ்வப்போது அகற்றப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் மீனவர்களும் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். கழிவு பொருட்களை கடல்நீரில் போடாமல் மீன்பிடித் துறைமுக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் முறையாக போடுவதற்கு முன்வர வேண்டும். இது தொடர்பாக மீனவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x