Last Updated : 15 Mar, 2019 11:13 AM

 

Published : 15 Mar 2019 11:13 AM
Last Updated : 15 Mar 2019 11:13 AM

மானாமதுரை தொகுதியில் தலை காட்டாத அதிமுக தேர்தல் பணிக் குழு: தனியாக வலம் வரும் அமைச்சர் பாஸ்கரன்

மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பும், அமைச்சர் செங்கோட்டையன் தலை மையிலான தேர்தல் பணிக்குழுவினர் தொகுதியில் பணிகளை மேற்கொள்ளாமல் உள்ளனர். தொண்டர்களின் அதிருப்தியை சமாளிக்க அமைச்சர் பாஸ்கரன் மட்டும் தனி ஆளாக தொகுதியில் வலம் வருகிறார்.

ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடை பெறவுள்ள 18 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது. இதை மனதில் வைத்து ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் பணிக்குழுவை அக்கட்சி தலை மை முன்பே நியமித்தது. மேலும், இடைத்தேர்தலில் வெற்றிபெறுவது அந்தந்த மாவட்ட அமைச்சர்களின் பொறுப்பு எனவும் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தனர். மானாமதுரை தொகுதிக்கு அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதில் அமைச்சர் பாஸ்கரன், எம்.பி செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் இடம் பெற்றனர். அக்குழுவினர் மானாமதுரை தொகுதியில் தொடர்ந்து முகாமிட்டு கட்சிக் கூட்டம் நடத்துவது, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவது என சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அக்குழுவினர் தொகுதியில் தலைகாட்டவில்லை. குறிப்பாக தற்போது தேர்தல் அறிவிப்பு வெளியாகி அனைத்து கட்சியினரும் சுறுசுறுப்பாக களப் பணியாற்ற தொடங்கிய நிலையில், தற்போது வரை அதிமுக தேர்தல் பணிக்குழு தொகுதி பக்கமே வரவில்லை. அமைச்சர் பாஸ்கரன் மட்டும் தனி ஆளாக தொகுதியில் வலம் வருகிறார். தொண்டர்கள் சோர்வடையாமல் இருக்க தொடர்ந்து கூட்டங்களை நடத்தி ஆலோசனை செய்து வருகிறார். இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறி யதாவது: மக்களவைத் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்ததால், குழுவில் உள்ள வர்களால் மானாமதுரை தொகுதிக்கு வர முடியவில்லை.

தற்போது சிவகங்கை மக்களவைத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கப்போவதாக கட்சி தலைமை தெரிவித்துள்ளது. இதனால் முழு மூச்சாக மானாமதுரை இடைத்தேர்தலில் கவனம் செலுத்த அதிமுக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். சில நாட்களில் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையிலான தேர்தல் பணிக் குழுவினர், மானாமதுரையில் முகாமிட உள்ளனர். தொடர்ந்து செயல் வீரர்கள் கூட்டங்கள் நடத்தப்படும். இத்தொகுதியை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு அமைச்சர் பாஸ்கரனிடம் கொடுக்கப் பட்டுள்ளது. அதனால் தான் யாரையும் எதிர்பார்க்கா மல் தனியாக தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x