Published : 27 Mar 2019 07:17 AM
Last Updated : 27 Mar 2019 07:17 AM

பெண்களின் வாக்குகளை கவர புது வியூகம்- திமுக சார்பில் 1,000 மகளிர் குழுக்கள்

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக 1,000-க்கும் மேற்பட்ட மகளிர் குழுக்களை திமுக அமைத்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ள பெண்கள், வீடு வீடாகச் சென்று பெண்களின் வாக்குகளை கவரும் வகையில், பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். இதனால், வெற்றியை நிர்ணயிப்பதிலும் பெண்களின் பங்கு அதிகம். இதை கருத்தில் கொண்டு, பெண்வாக்காளர்களை கவரும் வகையில் புதிய பிரச்சார வியூகங்களை கையில் எடுத்துள்ளது திமுக.

திமுக ஆட்சியில் பெண்களுக்காக கொண்டுவரப்பட்ட நலத் திட்டங்கள், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் ஆகியவற்றை பெண்களிடம் கொண்டு சேர்க்கதமிழகம் முழுவதும் 1,000-க்கும்மேற்பட்ட மகளிர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கேட்டபோது கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:

தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன்: மத்திய, மாநில அரசுகளால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முன்வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறோம். பெண்வாக்காளர்களிடம் பெண்களே நேரடியாக சென்று பிரச்சாரம் செய்ய,ஒவ்வொரு பூத் மிட்டியிலும் 5 பெண்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு குறித்தும், திமுக ஆட்சியில் சிறப்பாக இருந்த மகளிர் சுயஉதவிக் குழுக்கள் திட்டம் தற்போது முடங்கி இருப்பதை சுட்டிக்காட்டியும் அவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பெண்கள் சார்ந்தஅம்சங்கள் குறித்து பெண்களே பிரச்சாரம் செய்வது வரவேற்பை பெற்று வருகிறது. தென் சென்னையில் 600 மகளிர் குழுக்கள் உட்பட மொத்தம் 1,400 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள்அமைச்சர் தா.மோ.அன்பரசன்:

ஸ்ரீபெரும்புதூரில் தொகுதிவாரியாக திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களை எடுத்துக் கூறுவதோடு, இந்த ஆட்சியில் சிறு, குறு தொழில்கள் முடங்கியுள்ளதை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கிறோம். ரேஷன் கடைகளில் பொருட்கள் குறைப்பு, மகளிர் குழுக்களுக்கு மானியக் கடன் தராதது போன்ற செயல்பாடுகளால் பெண்கள் அதிருப்தியில் உள்ளனர். எங்கள் தொகுதியில் மட்டும் 620 மகளிர் கிளை நிர்வாகிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.முத்துசாமி:

பெண்களுக்கு என தனி குழுக்கள் அமைத்து பிரச்சாரம் செய்து வருகிறோம். கொங்குமண்டலம் உட்பட தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x