Published : 07 Mar 2019 12:03 PM
Last Updated : 07 Mar 2019 12:03 PM

திமுக தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை ஊர் அடங்கிய பிறகு திரைமறைவில் நடக்கவில்லை: அதிமுக கூட்டணி குறித்து ஸ்டாலின் விமர்சனம்

நாடு நலம் பெற, நாற்பது தொகுதிகளும் நமதாகட்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், "திமுக வரலாற்றில் தலைவர் கருணாநிதி இல்லாமல் சந்திக்கின்ற முதல் தேர்தல் களம் இது. இவ்வளவு பெரிய சுமையைத் தாங்குவது அவ்வளவு எளிதானதா என எண்ணிப் பார்த்தபோது, தலைவர் கருணாநிதி அனுதினமும் அன்புடனும் அக்கறையுடனும் ஊட்டிய ஆழமான கொள்கை உணர்வுடன் என்றும் உறுதியுடன் இருக்கிறோம் என கோடிக்கணக்கான அவரது தொண்டர்கள் தரும் உற்சாகத்தாலும் தெம்பாலும், இதயம் பெருக காட்டுகின்ற பாசத்தாலும் எனக்கு இந்த சுமையும் கூட சுகமாகி விடுகிறது.

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் - என்பதைப் போல, ஒருகோடி தொண்டர்கள் உடையான் எந்த சவாலையும் எதிர்கொள்வான், வெல்வான் என்பது திமுக சொல்லும் உண்மை. தலைவர் கருணாநிதி உயிருடன் இருந்தால், இன்று நாடு இருக்கும் நிலையில் என்ன முறையில் மக்களவைத் தேர்தல் களத்தைச் சந்திப்பாரோ அதே வழியில் மதச்சார்பற்ற - மக்கள் நலன் காக்கும் மாபெரும் முற்போக்குக் கூட்டணியை உருவாக்கி, பிரதமர் வேட்பாளர் யார் என்பதைத் தெளிவாக முன்மொழிந்து தேர்தல் களத்தைச் சந்திக்க திமுக ஆயத்தமாகிவிட்டது.

திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியின் நோக்கம், பாசிச ஆட்சியின் பிடியிலிருந்து இந்தியாவையும், அந்தப் பாசிசத்தின் காலில் விழுந்து காலபூஜை செய்து கிடக்கும் அடிமைகளிடமிருந்து தமிழ்நாட்டையும் மீட்டுருவாக்கம் செய்வது தான். அதற்காக ஒரே நோக்கம், ஒரே சிந்தனை – சொல் - செயல் என ஒன்றுபட்டு இணைந்து அமைந்திருக்கும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டு, அவர்களுடன் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, அந்தந்த கட்சிகளுக்கும் உரிய தொகுதிகளுக்கான பங்கீடு முழுமையாக நடந்து நிறைவேறியிருக்கிறது.

தலைவர் கருணாநிதி எப்படி திமுகவின் சார்பில் குழுக்கள் அமைத்து திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தை உறுதி செய்திடுவாரோ அதே நடைமுறைப்படி தொகுதிப் பங்கீடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

தொகுதி உடன்பாடு தொடர்பான எந்தப் பேச்சுவார்த்தையும் ஊர் அடங்கிய பிறகு யாருக்கோ சொந்தமான மர்ம மாளிகையில் திரைமறைவில் நடக்கவில்லை. நட்சத்திர ஓட்டலில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. பொதுக்கூட்ட மேடை ஏறுவதற்கு முன்பாக ஒப்பந்தம் போட்டு எப்படியாவது இழுத்து வந்து மேடையேற்ற வேண்டும் என்று திட்டமிடப்படவில்லை. கட் - அவுட்டை வைப்பதும் எடுப்பதுமாக கேலிக்கூத்துகள் இல்லை.

ஏனெனில், திமுக கூட்டணி என்பது ஊழல் ஆதராங்களைத் திரட்டி வைத்துக் கொண்டு - ரெய்டு பயம் காட்டி - மிரட்டி அமைக்கப்பட்ட செயற்கைக் கூட்டணி அல்ல. மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள மக்கள் விரோத – ஜனநாயக விரோத ஆட்சியாளர்களை விரட்டி அடிக்கின்ற கூட்டணி.

அதனால் தான் நிதானமாகப் பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்தன. உரிய வகையில் உவப்பான சூழலில் உடன்பாடுகள் ஏற்பட்டன. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள், மதிமுகவுக்கு 1 மக்களவை தொகுதி - 1 மாநிலங்களவைத் தொகுதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு 1 தொகுதி, அதுபோலவே போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சிக்கு 1 தொகுதி என 20 தொகுதிகள் தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு, மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுவதென ஒப்பந்தங்கள் நிறைவேறியுள்ளன.

தொகுதிப் பங்கீட்டில் திமுகவின் தலைமையிலான கூட்டணியே முந்தி நின்றது போல, களப்பணியிலும் அது தரப்போகிற வெற்றியிலும் திமுக அணியே முந்தி நிற்கும் - முதன்மை பெறும் - முழுமையாக வெல்லும் என்பது திண்ணம்.

அதற்கு அச்சாரமாகத்தான், கூட்டணி ஒப்பந்தங்கள் நிறைவடைந்த மறுநாள் மார்ச் 6-ஆம் நாள் விருதுநகர் மண்ணில் திமுகவின் சார்பில் நடந்த தமிழகத்தின் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பேரணியில் திரண்டிருந்தது மகத்தான மக்கள் வெள்ளம். கடல் காணா விருதுநகரில் மனிதத் தலைகளே கடல் அலைகளாக அற்புதக் காட்சி அளித்து அழிக்க முடியாத சாட்சிகளாக நின்றன. பெருந்திரளான திமுக தொண்டர்கள், தோழமைக் கட்சிகளின் தொண்டர்கள், பொதுமக்கள் எனத் திரண்டிருந்த கூட்டம், 40 தொகுதிகளின் வெற்றிச் செய்தியை விளம்பிடும் வகையில் இருந்தது.

அதே நாளில் பிரதமர் மோடி பங்கேற்ற கட்டாயக் கூட்டணியின் - பொருந்தாக் கூட்டணியின் பொதுக்கூட்டம் சென்னை அருகே நடைபெற்றது. பிரதமர், முதல்வர், துணை முதல்வர், மக்களவை துணை சபாநாயகர் எனப் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இருப்பவர்களே, பொறுப்பை மறந்து மனசாட்சியைத் துறந்து பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டதை நாடு பார்த்தது; நகைத்தது.

சில நாட்கள் முன்பாகத்தானே ஒருவர், தமிழ்நாட்டை பாஜக அரசு வஞ்சிக்கிறது என்று நாடாளுமன்றத்திலேயே பேசினார். இன்னொருவர், மத்திய அரசு நிதி வழங்காததால் மாநில அரசு கடன் சுமையில் தத்தளிக்கிறது என சட்டப்பேரவையில் தெரிவித்தார். இன்னொருவர் தலைமையிலான அரசின் தொழில் குறிப்புதானே, ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான சிறு - குறு தொழில்கள் முடங்கி விட்டன எனப் பேரவையிலேயே தெரிவித்தது.

இத்தனையையும் தமிழ்நாட்டு மக்கள் இன்னும் மறக்காத நிலையில், இவர்கள் எல்லாவற்றையும் மறந்தும் - மறைத்தும் அண்டப்புளுகு - ஆகாசப்புளுகு என அள்ளி விடுகிறார்களே என நாடு சிரித்தது. 'நீட்' தேர்வினால் உயிர் பறிக்கப்பட்ட அனிதா முதல் 'கஜா' புயலால் வாழ்விழந்த டெல்டா மாவட்ட மக்கள் வரை ஒருவரையும் மதிக்காத மத்திய பாஜக அரசுக்கு மாநிலத்தை ஆளும் அடிமைகளும் அவர்களின் திடீர் கூட்டாளிகளும் கவரி வீசுகிறார்களே என மக்கள் எள்ளி நகையாடினார்கள்.

அதைத்தான் விருதுநகர் பேரணியில் எடுத்துரைத்தேன். ஆட்சியாளர்களின் முகத்திரையைக் கிழிப்பதற்கு இன்னும் ஆதாரங்கள் ஏராளமானவை இருக்கின்றன. அத்தனையும் தேர்தல் களத்தில் அணிவகுத்து வெளிச்சத்திற்கு வந்தே தீரும்.

ஜனநாயகம் காக்கின்ற பெரும்பணியில் இருக்கின்ற இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் எனும் சுயாட்சிமிக்க அமைப்பு, ஆட்சியாளர்களின் அதிகார மீறல்களுக்கு அடிபணியாது என்கிற நம்பிக்கை இன்னமும் மிச்சமிருக்கிறது. அந்த நம்பிக்கை காப்பாற்றப்பட வேண்டுமென்றால், மக்களவைத் தேர்தலுடன் 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட வேண்டும். 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 21 சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் வழங்கவிருக்கும் ஜனநாயகத் தீர்ப்பு மத்தியில் ஆளப் போவது யார் என்பதை தீர்மானிப்பது மட்டுமல்ல, மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்.

மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். திடமாக இருக்கிறார்கள். தங்களை வாட்டி வதைக்கின்ற மத்திய - மாநில ஆட்சியாளர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்பதில் வேகமாகவும் உறுதியாகவும் இருக்கிறார்கள். மக்களின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டிய கடமை, தலைவர் கருணாநிதியின் தொண்டர்களின் கரங்களில் இருக்கிறது. 8 ஆண்டுகளாக திமுக ஆட்சிப் பொறுப்பில் இல்லை. நம் கையில் அதிகாரம் இல்லை.

ஆனாலும், ஆட்சியாளர்கள் தங்கள் திறனைக் காட்டத் துப்பின்றி நம் மீது சகதி வாரி அடிக்கப் பார்க்கிறார்கள். ஏனென்றால், அவதூறுகளைப் பரப்பியாவது ஆட்சியதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற பதவி வெறிதான் அவர்களைப் பொய்யிலே ஊற வைத்த புளுகு மூட்டைகளாக்கியிருக்கிறது.

கொள்ளையடிப்பதற்காக ஆட்சி நடத்துவோரின் எண்ணத்தை முறியடித்திட, திமுக மீண்டும் அரியணை ஏறிட, அதன் மூலமாக ஊராட்சிகள் தொடங்கி மாநகராட்சிகள் வரை அனைத்து நிலைகளிலும் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திட, தமிழ்நாடு செழித்திட திமுகவினர் ஒவ்வொருவரும் உறுதியேற்றுப் பணியாற்றிட வேண்டும்.

20 தொகுதிகளில் திமுக நிற்கிறது. மீதி 20 தொகுதிகளிலும் திமுக தான் நிற்கிறது. அந்த சீரிய எண்ணம்தான், தலைவர் கருணாநிதி ஊட்டியுள்ள தோழமை உணர்வு. 40 தொகுதிகளிலும் நமது கூட்டணியை எதிர்த்து நிற்பவர்கள் மக்கள் விரோத ஆட்சியாளர்கள் -அவர்களின் பங்குதாரர்கள். அந்த ஊழல் பெருச்சாளிகள் மீண்டும் நுழைவதற்கு ஒரு தொகுதியிலும் இடம் கொடுத்துவிடக் கூடாது.

அதுபோலவே, சட்டப்பேரவை இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் 21 தொகுதிகளிலும் திமுக பெறப் போகும் வெற்றி, ஒவ்வொரு வாழ்விலும் உதயசூரியனின் வெளிச்சக் கதிர்களைப் பாய்ச்சப் போகிற வெற்றி. கதிரொளி பாய்ந்தால் வளம் பெருகும். நாடு ஒளி மயமாகும்.

அந்த உயரிய எண்ணத்தோடு, ஓயாத உழைப்போடு உறுதியான உள்ளத்தோடு பணியாற்றிட வேண்டும். களம் அழைக்கிறது; காலம் நமக்கானது. தலைவர் கருணாநிதி காட்டிய வழியில் ஈட்டிடுவோம் வெற்றியை! நாற்பதும் நமதாகட்டும்! நாடு நலம் பெறட்டும்!" என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x