Published : 07 Mar 2019 10:23 AM
Last Updated : 07 Mar 2019 10:23 AM

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே பூத் கமிட்டிக்கு ரூ.10,000 பட்டுவாடா: மதுரையில் திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அதிமுக

மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், மதுரை மாவட்டத்தில் அதிமுகவினர் ‘பூத்’ கமிட்டிக்கு முதற்கட்டமாக தேர்தல் செலவுக்கு தலா ரூ.10,000 வீதம் பட்டுவாடா செய்துள்ளனர். திமுக ஆட்சியில் தென் மண்டல அமைப்புச் செயலாளராக மு.க.அழகிரி செல்வாக்காக இருந்தபோது, திருமங்கலத்தில் நடந்த இடைத்தேர்தலில் மிகப்பெரிய அளவில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அந்த ‘திருமங்கலம்’ பார்முலா தற் போது எல்லா தேர்தல்களில் திமுக, அதிமுகவால் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 8 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாததால் அவர்களால் முன்புபோல் வாக்காளர்களுக்கும், ‘பூத்’ கமிட்டிக்கும் செலவு செய்ய முடியவில்லை ஆனால், அதிமுகவினர் திருமங்கலம் பார்முலாவையே மிஞ்சும் வகையில் தற்போது இடைத்தேர்தல், பொதுத்தேர்தல் என கட்சிக்காரர்கள், வாக்காளர்களை தாராளமாக கவனித்து வருகின்றனர். மக்களவைத் தேர்தல் அதிமுக கூட்டணியில், கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் விவரம் மட்டும் இறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்தெந்த கட்சிக்கு எந்தத் தொகுதி என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், அதற்குள் மதுரை மாவட்டத்தில் அதிமுகவினர், ‘பூத்’ கமிட்டிக்கு முதற்கட்டமாக தேர்தல் செலவுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளனர். மதுரை மாநகர் செயலாளராக அமைச்சர் செல்லூர் கே.ராஜூவும், புறநகர் மாவட்டச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏவும் தற்போதே பேரவைத் தொகுதி வாரியாக ‘பூத்’ கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, கட்சியினரை கவனிக்க ஆரம்பித்து விட்டனர்.

இதுகுறித்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூறியதாவது: ‘‘அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் பெரியளவில் கெட்ட பெயர் இல்லை. திமுக முன்பு ஆட்சியில் இருந்தபோது, மதுரையில் நடந்த விரும்பத்தகாத சம்பவங்கள் தந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மக்கள் மீளவில்லை. அதனால், மக்கள் அதிமுகவுக்கு ஆதரவாகவே உள்ளனர். அதனால், மதுரை தொகுதியில் யாரை நிறுத்தினாலும் வெற்றி உறுதி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மதுரையில் அதிமுக போட்டியிடுவது உறுதியாகிவிட்டதால் கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்த ‘பூத்’ கமிட்டிக்கு பணம் வழங்கி தேர்தல் வேலையைத் தொடங்கச் சொல்லிவிட்டோம்.

புறநகர் மாவட்டத்தில் 1,750 ‘பூத்’களும், மாநகர் மாவட்டத்தில் 960 ‘பூத்’களும் உள்ளன. ஒரு ‘பூத்’க்கு 50 நிர்வாகிகளை நியமித்துள்ளோம். அவர்கள் 200 வாக்காளர்களுக்கு 6 பேர் வீதம் தேர்தல் பணியாற்றுவார்கள். ஒவ்வொரு வார்டு, கிராமங்களில் தண்ணீர் பிரச்சினை, மற்ற பொது பிரச்சினைகளை உடனே அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள், எம்எல்ஏ, அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வுகாண உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர, கட்சிக்காரர்கள், அனைத்து அடித்தட்டு வாக்காளர்களுக்கும் தமிழக அரசு வழங்கும் ரூ. 2 ஆயிரம் உதவித் தொகையை பெற்றுத் தரும் பொறுப்பு பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x