Published : 13 Mar 2019 08:25 AM
Last Updated : 13 Mar 2019 08:25 AM

மார்ச் தொடக்கத்திலேயே கொளுத்துகிறது வெயில்: தலைவர்களின் பகல் நேர கூட்டங்கள் முறைப்படுத்தப்படுமா?

தமிழகத்தின் பல நகரங்களிலும் மார்ச் மாதத் தொடக்கத்திலேயே 100 டிகிரியை தாண்டி வெப்பம் கொளுத்தும் நிலையில், பகல் நேர அரசியல் பொதுக்கூட்டங்களை முறைப்படுத்த வேண்டும் என்று மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த வடகிழக்கு பருவகாலத்தில் சராசரியாக 33 செ.மீ. மழை பதிவானது. இது வழக்கத்தைவிட 24 சதவீதம் குறைவு. தருமபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவாக மழை பெய்துள்ளது. இதனால் நிலப்பரப்பு ஈரப்பதம் குறைந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மார்ச் மாத தொடக்கத்திலேயே வெப்பம் அதிகரித்து வருகிறது.

அதிகபட்சமாக மதுரையில் 106 டிகிரி, வேலூர், திருத்தணியில் 105 டிகிரி வெப்பநிலை பதிவாகி யுள்ளது. அடுத்து வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத் தில் அரசியல் களமும் சூடுபிடித் துள்ளது.

தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வதில் பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் முனைப்புடன் உள்ளன. அதன் காரணமாக அந்த 2 கட்சிகளின் நட்சத்திரத் தலைவர்கள், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நடக்க உள்ள பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளனர்.

பெரும்பாலும் இதுபோன்ற பிரச்சார பொதுக்கூட்டங்கள் பகல் நேரத்திலேயே நடத்தப்படுகிறது. இதற்காக பல மணி நேரம் முன்னதாகவே பொதுமக்கள் அழைத்துவரப்பட்டு அமர வைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு போதிய குடிநீர், கழிப்பிட வசதிகளும் செய்துதரப்படுவது இல்லை. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தாலும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

எனவே, இதுபோன்ற கூட்டங்களை முறைப்படுத்துவது காலத்தின் கட்டாயம். குறைந்தபட்சம் மாலை 4 மணிக்கு பிறகே கூட்டங்கள் நடத்த அனுமதிக்க வேண்டும். பொது சுகாதார விதிகளின்படி, நிகழ்ச்சியில் கூடும் பொதுமக்களுக்கு போதிய குடிநீர், கழிவறை வசதியை ஏற்படுத்த வேண்டும். இந்த வசதிகள் இல்லாத பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுபற்றி கேட்டபோது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது:இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வழக்கமாக கோடை காலத்தில்தான் நடத்தப்படுகிறது. எனவே அதற்கேற்ப, பொதுக்கூட்டங்களில் அடிப்படை வசதிகளை அரசியல் கட்சிகள் உறுதி செய்ய வேண்டும்.

இந்தியா சுதந்திர நாடு. யார் வேண்டுமானாலும் கூட்டம் நடத்தலாம். அதில் பங்கேற்க மக்களும் செல்லலாம். அவர்களுக்கு இருக்கை, பந்தல்கள் அமைப்பது கட்சிகளின் வேலை. அவர்கள்தான் இதை செய்ய வேண்டும். அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். தங்களது பொறுப்பு மற்றும் மக்களின் நிலையை உணர்ந்து கட்சிகளாகவே இந்த வசதிகளை செய்துதர வேண்டுமே தவிர, நிர்ப்பந்திக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x