Published : 10 Mar 2019 07:57 AM
Last Updated : 10 Mar 2019 07:57 AM

பிரதமர் மோடியுடன் குமாரசாமி சந்திப்பு- நிவாரண நிதி கோரியதாக விளக்கம்

கர்நாடகாவில் காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் அம்மாநில முதல்வர் குமாரசாமி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸும் மஜதவும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் இறுதிகட்டத்தை எட்டவில்லை. அண்மையில் முன்னாள் பிரதமர் தேவகவுடா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதும் தோல்வியில் முடிந்தது.

இதனிடையே பிரச்சாரத்துக்காக கர்நாடகா வந்த பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் - மஜத கூட்டணியையும், முதல்வர் குமாரசாமியையும் கடுமையாக விமர்சித்தார். அவரை குமாரசாமியும் சரமாரியாக விமர்சித்தார். இந்நிலை யில் குமாரசாமி நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் இருவர் திடீரென சந்தித்தது கர்நாடக காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து குமாரசாமி கூறுகையில், “தற்போதைய அரசியல் சூழ்நிலையை கடந்து பிரதமர் என்ற முறையில் மோடியை சந்தித்து பேசினேன். கர்நாடகாவில் மொத்தமுள்ள 176 வட்டங்களில் 156 வட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே வறட்சி நிவாரண நிதியாக ரூ.11 ஆயிரத்து 384 கோடியை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தேன். முதல்கட்டமாக கர்நாடகாவுக்கு ரூ.2064 கோடியை உடனடியாக வழங்குமாறு கேட்டேன். இதில் தற்போதைய அரசியல் சூழல் தொடர்பான பேச்சு எதுவும் இடம்பெறவில்லை'' என்றார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பிரதமர் மோடி - குமாரசாமி சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x